ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர் குழுவிலிருந்து விடை பெறுகிறார் லண்டன் டாக்டர் ரிச்சர்ட்
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்துவரும் டாக்டர்கள் குழுவிலிருந்து லண்டனின் சிறப்பு டாக்டரான ரிச்சர்ட் வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு சிகிச்சையளித்து வந்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட், அப்பல்லோ மருத்துவ குழுவிலிருந்து வெளியேற உள்ளாராம்.
உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம், 22ம் தேதி முதல், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ஜெயலலிதா.

உடல்நல பாதிப்பின் தீவிரத்தை உணர்ந்து, உயர் சிகிச்சை அளிப்பதற்காக இங்கிலாந்தை சேர்ந்த பல்துறை மருத்துவ நிபுணரான டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலே செப்டம்பர் 30ம் தேதி அப்பல்லோவுக்கு வரவழைக்கப்பட்டார். தீவிர சிகிச்சை, பல உறுப்புகள் பாதிப்பை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளில், ரிச்சர்ட் நிபுணத்துவம் பெற்றவர்.
அவ்வப்போது அவர் லண்டன் சென்றுவிட்டு மீண்டும், சென்னை வந்து ஜெயலலிதா உடல் நிலை குறித்து பரிசோதித்து சென்று வந்தார். பெரும் நேர விரையம் உள்ளிட்ட சிரமங்கள் நடுவேயும், ரிச்சர்ட் ஜான், லண்டன்-சென்னை நடுவே பயணப்பட்டு வந்தார்.
இந்நிலையில், ஜெயலலிதா தற்போது உடல் நலம் தேறி பேச ஆரம்பித்துவிட்டார். எனவே இனிமேலும் ரிச்சர்ட் சேவை தேவைப்படாது என அப்பல்லோ மருத்துவ குழு கருதுகிறது. இதையடுத்து நவம்பர் 7ம் தேதிவரை ஜெயலலிதாவுக்கு அவ்வப்போது மருத்துவ சிகிச்சையில் ரிச்சர்ட் உதவுவார் எனவும், பிறகு இந்த சிகிச்சையிலிருந்து அவர் முழுக்க விடுவிக்கப்படுவார் எனவும் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம், தீபாவளி முடிவடையும்வரை ஜெயலலிதா மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளதாகவே தெரிகிறது.












Click it and Unblock the Notifications