போதையில் ஆசிட்டை குடித்த குடிகாரன் பலி
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் குடிபோதையில் இருந்த ஆசாமி ஒருவர் டாஸ்மாக் சரக்கு என நினைத்து ஆசிட்டை குடித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகாவில் உள்ள நல்லூர் கந்தம்பாளையம் அருகே உள்ள கருங்கல்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் ஜெயபால் (22). இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. கடந்த 27ந் தேதி அளவுக்கு மேலே குடித்து விட்டு போதையில் தடுமாறியபடியே வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது, வீட்டில் கழிவறை சுத்தம் செய்வதற்காக வாங்கி வைத்திருந்த அமிலத்தை "டாஸ்மாக்" சரக்கு என நினைத்த ஜெயபால் தண்ணீர் கலக்கமல் குடித்துள்ளார்.
குடித்த சிறிது நேரத்தில் வயிறு எரியத்தொடங்கியதும், ஐயோ அம்மா என்று கத்தி கூப்பாடு போட்டார். அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் உடனடியாக ஜெயபாலை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது, எனினும் ஞாயிற்றுக்கிழமையன்று ஜெயபால் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது குறித்து கந்தம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மேற்கொண்டுள்ளனர்.