மாணவிகளை உரசிய குடிகாரர்... தள்ளி விட்ட பெண் போலீஸ் கன்னத்தில் அறைந்தார்!
நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் என்ற பகுதியில் ஒரு குடிகார வாலிபர், பள்ளி செல்லும் மாணவியரை உரசியபடி நடந்தார். இதைப் பார்த்த பெண் போக்குவரத்துக் காவலர் ஒருவர் அந்த வாலிபரை அந்தப் பக்கம் போ என்று கூறி தள்ளி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த குடிகாரர், பெண் போலீஸ்காரரின் கன்னத்தில் பளார் என அறைந்து விட்டார். இதைப் பார்த்து கொதித்துப் போன பொதுமக்கள் அந்த வாலிபரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
போக்குவரத்துக் காவலர் ஷீலா என்பவர் நேற்று மாலை போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மாணவ, மாணவிகள் பலர் பஸ் ஏறுவதற்காக பஜார் பகுதியில் காத்திருந்தனர். அப்போது அவர்களை பத்திரமாக பஸ்களில் ஏற அவர் உதவி செய்தார்.
அந்த நேரத்தில் ஒரு குடிகார வாலிபர் போதையில் தள்ளாடியபடி வந்தார். பஸ்சில் ஏறிக் கொண்டிருந்த மாணவிகளை உரசிக் கொண்டு அவர் போனார். இதைப் பார்த்துக் கோபமடைந்த ஷீலா, அந்த வாலிபரைப் பிடித்துத் தள்ளி ஒழுங்காக போ என்று கூறி திட்டினார். இதனால் கோபமடைந்த அந்த குடிகாரர், ஷீலாவின் கன்னத்தில் பளார் என அடித்து விட்டார்.
இதைப் பார்த்த பொதுமக்கள் கொதிப்படைந்தனர். அந்த நபரைப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் அந்த வாலிபர் அதிர்ச்சி அடைந்தார். போதையும் சற்று தெளிந்து போனது. பின்னர் அவர்களை விலக்கி விட்ட போலீஸ்காரர் ஷீலா, அந்த நபரை ஒரு வண்டியில் ஏற்றி காவல் நிலையம் கொண்டு சென்றார். அங்கு போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தநர். அந்த நபரின் பெயர் கார்த்தி, மேல் குந்தா பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.