போதையில் ரகளை செய்த டாக்டர்.. வாட்ஸ் ஆப்பில் வலம் வந்த வீடியோ…
கோவை: இப்போதெல்லாம் மது போதையில் பொது இடத்தில் யார் அலம்பல் செய்தாலும் அதை அப்படியே வீடியோவாக எடுத்து வாட்ஸ் அப்பில் வலம் வருகிறது. கோவை அரசு மருத்துவமனையில் ஃபுல் போதையில் ரகளை செய்த பயிற்சி டாக்டரின் வீடியோவும் வலம் வந்த காரணத்தால் இப்போது விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார்.
சிக்கலில் சிக்கிய டாக்டரின் பெயர் செவ்வவேல்,23. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகிலுள்ள மீச்சூர் பகுதியை சேர்ந்த இவர் கோவை அரசு பொதுமருத்துவக் கல்லுாரியில், பயிற்சி மருத்துவராக உள்ளார்.
கடந்த ஞாயிறன்று பணியை முடித்த செல்வவேல், மாலையில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. போதை தலைக்கேறிய நிலையில், கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் ரகளையில் ஈடுபட்டார். அப்போது, மருத்துவமனை வளாகத்திலிருந்த பொதுமக்கள் மற்றும் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் அவர்களின் உறவினர்கள் இதை பார்த்து முகம் சுழித்தனர். ஏராளமானோர் தங்களின் செல்போனில் வீடியோவாக எடுத்து டாக்டரின் ரகளையை "வாட்ஸ் ஆப்பில்" கோவை முழுவதும் அனுப்பினர்.
இந்நிலையில், பயிற்சி டாக்டர் செல்வவேல் ரகளையில் ஈடுபட்டது குறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் அசோகன் கூறியுள்ளார். இதற்காக மருத்துவமனையின் சட்டம் சார்ந்த மருத்துவத் துறை தலைவர் மற்றும் உளவியல் துறைத் தலைவர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. பயிற்சி டாக்டர் ரகளையில் ஈடுபட்டதற்கு, வேறு காரணங்கள் உள்ளதா? என்பது குறித்த விசாரணை அறிக்கை யின் அடிப்படையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.