டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா மரணத்திற்கு முன் செல்போனில் பேசியது யார்? சிபிசிஐடி விசாரணை
கடலூர்: தலித் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அவருடன் செல்போனில் பேசியவர்கள் யார் யார் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியா கடந்த 18-ந் தேதி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் பணியில் சேர்ந்த ஏழு மாதத்தில் இந்த சம்பவம் நடந்ததாலும், தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டதாலும் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தங்களது மகளின் மரணத்தில் மர்மம் உள்ளது என அவரது பெற்றோர் புகார் தெரிவித்தனர். விஷ்ணுபிரியாவின் தோழியும் கீழக்கரை டி.எஸ்.பியுமான மகேஸ்வரியும் விஷ்ணுபிரியா தற்கொலையில் உயர் அதிகாரிகள் நெருக்கடி இருப்பதாக சந்தேகம் கிளப்பினார். இந்த நிலையில் விஷ்ணுபிரியா தற்கொலை மற்றும் கோகுல்ராஜ் கொலை வழக்குகளை சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு மாற்றி உத்தரவிட்டது.
சிபிசிஐடி எஸ்பி நாகஜோதி தலைமையில் ஏடிஎஸ்பி ஸ்டாலின், டிஎஸ்பி வேலன், ராஜன் ஆகியோர் கொண்ட குழுவினர் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்
விஷ்ணு பிரியாவின் இரு மொபைல் எண்களுக்கும் கடந்த 10 நாட்களாக வந்த அழைப்புகள், அவர் தொடர்பு கொண்டு பேசிய அழைப்புகள் குறித்த பட்டியலை சிபிசிஐடி போலீஸார் எடுத்துள்ளனர். அவருடன் அடிக்கடி அதிக நேரம் பேசியவர்கள் குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மூன்று கோணங்களில் விசாரணை
கோகுல்ராஜ் கொலை சம்பவத்துக்கு காரணமானவர்களின் நெருக்கடி, குடும்பம் மற்றும் தனிப்பட்ட காரணங்கள், உயர் அதிகாரிகள் நெருக்கடி ஆகிய மூன்று கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை
நாமக்கல் எஸ்பி செந்தில்குமார், டிஎஸ்பி ராஜூ, இன்ஸ்பெக்டர் ராஜூ, விஷ்ணுபிரியா பணிபுரிந்த எல்லைக்குட்பட்ட காவல்நிலையத்தில் பணியாற்றுபவர்கள், அவரது வாகன ஓட்டுநர் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடந்து முடிந்துள்ளது.
உறவினர்களிடம் விசாரணை
கடலூரில் உள்ள விஷ்ணு பிரியாவின் பெற்றோர், உறவினர், தோழிகள் ஆகியோரிடம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
செல்போனில் பேசியது யார்?
இதனிடையே, விஷ்ணுபிரியா 2 செல்போன்கள், ஒரு லேப்டாப், டேப்லெட் ஆகியவற்றை பயன்படுத்தியுள்ளார். இவற்றின் மூலம் அவருடன் தொடர்புகொண்டவர்கள் யார், யார் என்பதையும், விஷ்ணு பிரியா யாரிடம் அதிக நேரம் பேசியுள்ளார் என்பதையும் தனிப்பிரிவு ஆய்வு செய்து வருகிறது.
அதிக நேரம் பேசிய எண்களை வைத்திருப்போர் தனி வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. ஏற்கெனவே விசாரணை நடத்தியவர்கள் தெரிவித்த தகவலுக்கும், மொபைல் போன் பேச்சு குறித்த ஆதார தகவலுக்கும் முரண்பாடு உள்ளதா என்பதில் கவனம் செலுத்தி வரும் சிபிசிஐடி போலீசார், விஷ்ணுபிரியாவின் தற்கொலைக்கான புதிரை அவரது தொலைபேசி அழைப்புகள் விடுவிக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.
சிபிஐ விசாரணை
இதனிடையே தமிழக காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை மத்திய புலனாய்வுத் துறை மூலம் விசாரித்து அறிக்கை அளிக்குமாறு பரிந்துரைக்க வேண்டும் என்று, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் (என்ஹெச்ஆர்சி) தனியார் மனித உரிமைகள் அமைப்பு மனு அளித்துள்ளது.
மேலதிகாரிகள் அழுத்தம்
இது தொடர்பாக உலக மனித உரிமைகள் ஆணையம் என்ற தனியார் அமைப்பு சார்பில் அதன் தலைவர் சரவணன் கருப்பசாமி வியாழக்கிழமை அளித்த மனுவில், விஷ்ணு பிரியா தற்கொலை செய்யும் முன்பு அவரது தோழியும் கீழக்கரை டிஎஸ்பியுமான மகேஸ்வரியைத் தொடர்பு கொண்டு, கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிலரைச் சிக்க வைக்க மேலதிகாரிகள் அழுத்தம் கொடுப்பதாகக் கூறியுள்ளார்.
தாழ்த்தப்பட்ட சமூகம்
விஷ்ணு பிரியா தற்கொலை சம்பவத்தின் பின்னணியில் காவல் துறையில் பெண் அதிகாரிகளுக்கு எதிரான கொடுமைகள், துன்புறுத்தல்கள், அழுத்தங்கள் எந்த அளவுக்கு விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிய வந்துள்ளது. குறிப்பாக, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண் காவல் துறையில் அதிகாரியாகப் பணியாற்ற எவ்ளவு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் புரிய வைக்கிறது.
நடவடிக்கை தேவை
விஷ்ணு பிரியா மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டதற்கு யார் காரணம் என்பதை அதே காவல் துறையில் அதிகாரியாகப் பணியாற்றுபவரால் விசாரித்து குற்றவாளிக்கு தண்டனை கிடைக்கச் செய்ய முடியாது. எனவே, இந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தலையிட்டு விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரித்து அறிக்கை அளிக்க பரிந்துரைக்க வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications