ஜனநாயகத்தில் ஏற்பட்ட விபத்தே அதிமுகவின் வெற்றி: 9-வது முறையாக சட்டசபைக்குள் நுழையும் துரைமுருகன்
சென்னை: ஜனநாயகத்தில் ஏற்பட்ட விபத்துதான் அதிமுகவின் வெற்றி என்று திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் கூறியுள்ளார்.
திமுகவின் மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் 5-வது முறையாக தொடர் வெற்றியைப் பெற்று 9-வது முறையாக தமிழக சட்டசபைக்குள் எம்.எல்.ஏ.வாக நுழையும் பெருமையைப் பெற்றுள்ளார். 1971-1976ஆம் ஆண்டு காட்பாடி சட்டசபை தொகுதியில் முதன் முதலாக போட்டியிட்டு வெற்றி பெற்றார் துரைமுருகன்.
ராணிப்பேட்டை- காட்பாடி
பின்னர் 1977,1980 ஆகிய சட்டசபை தேர்தல்களில் ராணிப்பேட்டை தொகுதியில் அவர் வென்றார். 1984-ம் ஆண்டு காட்பாடி சட்டசபை தொகுதியில் மீண்டும் துரைமுருகன் போட்டியிட்ட போதும் அவரால் வெற்றி பெற இயலவில்லை.
காட்பாடியில் தொடர்ச்சியாக போட்டி...
1989-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் காட்பாடியில் போட்டியிட்டு வென்று பொதுப்பணித்துறை அமைச்சரானார். 1991-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காட்பாடி தொகுதியில் மீண்டும் துரைமுருகன் தோல்வியைத் தழுவினார்.
அதன் பின்னர் 1996, 2001, 2006, 2011, 2016 ஆகிய சட்டசபை தேர்தல்களில் காட்பாட்டியிலேயே போட்டியிட்டு தொடர்ந்து 5-வது முறையாக வெற்றி மகுடம் சூட்டி வருகிறார் துரைமுருகன்.
9-வது முறையாக எம்.எல்.ஏ.
தற்போது 9-வது முறையாக சட்டசபைக்குள் நுழைகிறார் துரைமுருகன். தம்முடைய வெற்றி குறித்து செய்தியாளர்களுக்கு துரைமுருகன் அளித்த பேட்டி:
உயிருள்ளவரை...
ஒரே தொகுதியில் 10 முறைக்கு மேல் நிற்பது என்பது சாதாரணமானது அல்ல.. அதிலும் தொடர்ந்து வெற்றி பெறுவது என்பது சாதாரணமானது அல்ல.
இந்த எளியேனுக்கு அந்த பெருமையைத் தேடித் தந்தது என் காட்பாடி தொகுதி வாக்காள பெருமக்கள்தான். என் வாழ்நாள் உள்ளளவும் அவர்களுக்காக நான் உயிருள்ளவரையில் உழைப்பேன்...பாடுபடுவேன்.. இதுதான் இந்த நேரத்தில் நான் எடுக்கிற சபதம்.
சில நேரங்களில் ஜனநாயகத்தில் விபத்து ஏற்படுவது உண்டு. அதுதான் இப்போது ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு துரைமுருகன் கூறினார்.