கருணாநிதி ஒரு தீர்க்கதரிசி....ஜெ.வுக்கு பிறகு அதிமுக உடையும் என முன்கூட்டியே சொன்னார்- துரைமுருகன்
ஜெயலலிதா இறப்புக்கு பிறகு அதிமுக இரண்டாக உடையும் என்று முன்கூட்டியே சொன்னவர் கருணாநிதி என்று துரைமுருகன் தெரிவித்தார்.
ஈரோடு: ஜெயலலிதா இறப்புக்கு பிறகு அதிமுக இரண்டாக உடையும் என்று முன்கூட்டியே சொன்னவர் கருணாநிதி என்று ஈரோடு மாநாட்டில் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
ஈரோட்டில் திமுக சார்பில் மண்டல மாநாடு நேற்று தொடங்கி இருநாட்களுக்கு நடைபெறுகிறது. 2-ஆவது நாளாக இன்று கனிமொழி, துரைமுருகன் உள்ளிட்டோர் பேசினார்.
கனிமொழி பேசுகையில், மாநில சுயாட்சி உரிமைகள் தொடர்பாக குரல் கொடுத்து வரும் ஸ்டாலின், தமிழக அரசிடம் இருந்து டியூஷன் ஃபீஸ் வாங்க வேண்டும் என்றார்.
அனுமதி இல்லை
இதைத் தொடர்ந்து திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் பேசுகையில், காவிரி விவகாரத்தில் பிரதமரை அனைத்து கட்சி பிரதிநிதகளும் பார்க்க வேண்டும் என்றால் அதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. துறை அமைச்சரைத்தான் பார்க்க வேண்டும் என்கிறார்.
சின்ன வேலை
அதிமுக ஆட்சியை கலைப்பது அவ்வளவு கடினம் இல்லை. அது சின்ன வேலை. கருணாநிதி இருந்தால் இன்னேரம் ஆட்சி கவிழ்ந்திருக்கும் என்று சிலர் கூறுகின்றனர்.
ஜெ. இறப்புக்கு பிறகு அதிமுக 2-ஆக உடையும் என்று முன்கூட்டியே சொன்ன கருணாநிதி ஒரு தீர்க்கதரிசி. அப்போது அதிமுகவின் அணியினர் உங்களிடம் ஆதரவு கேட்டால் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது.
கொடுக்கவில்லை
இதுபோல் எம்ஜிஆர் மறைந்தபோது ஜெ.அணி, ஜானகி அணியினர் தன்னை வந்து அணுகியபோது அவர்களுக்கு தான் ஆதரவு கொடுக்கவில்லை. எனவே தற்போது யாராவது வந்தால் அவர்களுக்கு ஆதரவு கொடுத்து திமுக ஆட்சி அமைக்கக் கூடாது.
நேர்வழி
அழிந்து போகும் அதிமுகவுக்கு ஆதரவு தருகிறோம் என்ற பெயரில் உயிர் கொடுக்கக் கூடாது என்றவர் கருணாநிதி. தொண்டர்கள் விரும்பும்படி ஸ்டாலின் முதல்வராக வேண்டுமானால் ராஜபாட்டையில் நடந்து சென்று வர வேண்டும். கருணாநிதியின் மகன் நேர்வழியில்தான் ஆட்சியில் அமர வேண்டும் என்றார். எதிர்க்கட்சி என்பது எதிர்த்து பேசுவது மட்டுமல்ல, தேவைப்படும் போது ஆலோசனைகளை வழங்குவதற்காகவும்தான் என்று துரைமுருகன் தெரிவித்தார்.