விசிலுக்குதான் இவுங்க ஓட்டு போட்டாங்க.. வீட்டு பணியாளர்களை விஜய்க்கு அறிமுகம் செய்த துரை வைகோ
சென்னை: தமிழக முதல்வர் விஜய் இன்று ஸ்டாலின், வைகோ உள்பட மூத்த தலைவர்களை அவர்களது வீட்டிற்கே சென்று சந்தித்தார். வைகோ வீட்டிற்கு சென்றபோது, வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களை விஜய்க்கு துரை வைகோ அறிமுகம் செய்து வைத்தார். இவுங்க எல்லோரும் விசிலுக்கு ஓட்டு போட்டவங்க என்று விஜய்யிடம் வீட்டு பணியாளர்களை அறிமுகம் செய்து வைத்தனர். இந்த காட்சிகள் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக முதல்வர் விஜய் இன்று முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரை அவர்களது வீடுகளுக்கே சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசி வாழ்த்தும் பெற்றார்.

உற்சாகத்துடன் காணப்பட்ட வைகோ
அதன்படி அண்ணா நகரில் உள்ள வைகோவின் வீட்டிற்கு விஜய் சென்று வாழ்த்து பெற்றார். விஜய் தன் வீட்டுக்கு வந்ததும் வெளியே காத்திருந்த துரை வைகோ ஆரத்தழுவி விஜய்யை வரவேற்றார். அப்போது பூமாலை மற்றும் சால்வை அணிவித்து அழைத்து வந்தார். வீட்டின் வாசலில் காத்திருந்த வைகோ, விஜய்யை பார்த்தவுடன் உற்சாகத்தில் திளைத்தபடி கட்டி அணைத்து அன்பு மழையை கொட்டினார்.
கையை பிடித்து வீட்டிற்குள் அழைத்து சென்ற வைகோ, தன் வீட்டில் உள்ளவர்களை ஒவ்வொருவராக அறிமுகம் செய்து வைத்தார். விஜய்யை பார்த்ததில் இருந்தே வைகோவுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை என்பது போலே உற்சாகத்துடன் காணப்பட்டார். விஜய்யும் வைகோவுக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறினார்.
விசிலுக்கு தான் ஓட்டு போட்டாங்க..
வைகோவும் விஜய்க்கு சால்வை அணிவித்தும், பூமாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் பரபரப்பாகவும் உற்சாகத்துடனும் காணப்பட்ட வைகோ, தனது கட்சி நிர்வாகிகளை விஜய்க்கு அறிமுகப்படுத்தினார். இதனை தொடர்ந்து வீட்டில் உள்ள பெண்களை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது வீட்டில் வேலை செய்து வந்த பணிப்பெண்களையும் விஜய்யிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

விஜய்யும் அவர்களை பார்த்து கை கூப்பி வணக்கம் தெரிவித்தார். அப்போது துரை வைகோ இவங்க எல்லாரும் விசிலுக்கு ஓட்டு போட்டாங்க என தெரிவித்தார். அந்த பெண்களும் விஜய்க்கு திரிஷ்டி கழித்தனர். அப்போது பதிலுக்கு விஜய்யும் அந்த பெண்ணுக்கு திருஷ்டி கழித்தார். பின்னர் உட்காருங்கள் விஜய் என ஷோபாவில் உட்கார வைத்தார்.
விஜய் கிளம்பும் வரை..
பின்னர் விஜய் வீட்டில் இருந்து கிளம்பும் வரை வைகோ முகத்தில் உற்சாக களை இருந்தது. வீட்டில் இருந்து வெளியே அழைத்து வரும் போதும் விஜய்யின் கையை பிடித்துக்கொண்டே பேசியபடியே வந்தார். வெளியே நின்ற வைகோ ஆதரவாளர்கள், பொதுமக்கள் உற்சாக கோஷம் எழுப்பினர். தொடர்ந்து வைகோ விஜய்யின் கான்வாய் வாகனம் வரை கையை பிடித்துக்கொண்டே அழைத்து வந்து வழியனுப்பி வைத்தார்.

விஜய் வந்ததில் இருந்து கான்வாய் வாகனத்தில் வழியனுப்பி வைக்கும் வரை அவரது முகத்தில் புன்னகை ததும்பிக்கொண்டிருந்ததையே பார்க்க முடிந்தது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ, "தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியலை வளர்க்கும் முடிவு. இது அவரது அரசியல் பெருந்தன்மையையும், முதிர்ச்சியையும் காட்டுகிறது. விஜய்க்கு நான் ஏதும் அறிவுரை வழங்கவில்லை" என்றார்.
வெற்றி தொடர வாழ்த்தினோம்
துரை வைகோ கூறுகையில், "இது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது. அவருடைய அற்புதமான வெற்றிக்கு நாங்கள் வாழ்த்து தெரிவித்தோம். நல்லாட்சியை வழங்குவதில் நாங்கள் அவருடன் இருக்கிறோம். அவரது வெற்றி தொடர வாழ்த்தினோம். முதல்வர் விஜய்க்கு ஆதரவை வழங்குவோம் என்றும் தெரிவித்தோம். வைகோவின் உடல்நலம் குறித்து விஜய் விசாரித்தார். நல்லாட்சியை வழங்குவதற்கான அவரது முயற்சியில் நாங்களும் அவருடன் இருப்போம் என்றும் சொன்னோம்" என கூறினார்.














Click it and Unblock the Notifications