எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம், ஜனநாயக படுகொலை.. துரைமுருகன் காட்டம்!
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது ஜனநாயக படுகொலை என திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது ஜனநாயக படுகொலை என திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், செந்தில்பாலாஜி உள்ளிட்ட 18 எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப்பெறுவதாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து ஆளுநரிடமும் ஆதரவை திரும்பப்பெறுவதகா கடிதம் அளித்தனர்.
இதுகுறித்து 18 எம்எல்ஏக்களும் விளக்கம் அளிக்க சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். ஆனால் குடகு ரிசார்ட்டில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் விளக்கம் அளிக்கவில்லை.
துரைமுருகன் கண்டனம்
இந்நிலையில் 18 எம்எல்ஏக்களையும் சபாநாயகர் தனபால் இன்று தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதற்கு திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகப் படுகொலை
எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் ஜனநாயகப் படுகொலை என துரைமுருகன் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என்றும் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.
ஒருதலைப்பட்சமாக நடக்கிறார்
பெரும்பான்மையை நிரூபிக்காமால் ஆட்சியாளர்கள் தங்களை எதிர்த்த 18 பேரை வீட்டிற்கு அனுப்புவது நியாயமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். நேர்மையாக நடக்க வேண்டிய சபாநாயகர் ஒருதலைபட்சமாக நடக்கிறார் என்றும் துரைமுருகன் சாடியுள்ளார்.
வெட்கப்படுகிறேன் வேதனைப்படுகிறேன்
இந்த அக்கிரமத்தை செய்த சபாநாயகரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்றும் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார். சபாநாயகரின் நடவடிக்கைக்காக தான்
வெட்கப்படுவதாகவும் வேதனைப்படுவதாகவும் துரைமுருகன் தெரிவித்தார்.
நம்பிக்கை சரிந்துவிட்டது
சபாநாயகரின் இந்த நடவடிக்கையால் அவர் மீதான நம்பிக்கை சரிந்து விட்டதாகவும் துரைமுருகன் கூறியுள்ளார். ஒரு தலைபட்சமாக நடந்துகொள்ளும் சபாநாயகர் எப்படி எதிர்க்கட்சிகளிடம் நியாயமாக நடந்துகொள்வார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாரம்பரியத்தை குழித்தோண்டி புதைப்பு
எடப்பாடி பழனிச்சாமியை காப்பாற்றும் நோக்கிலேயே சபாநாயகர் தனபால் எம்எல்ஏக்களை தகுதிநீக்கம்செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் இதன்மூலம் சபாநாயகர் சட்டசபையின் பாரம்பரியத்தை குழித்தோண்டி புதைத்துள்ளார் என்றும் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.