அண்ணாவுடன் இணைந்தார் கருணாநிதி.. 5 மணி நேரத்தில் ஏற்பாடு செய்த தம்பிகள்!
கருணாநிதியின் இறுதி சடங்குகள் அண்ணா சமாதி அருகே நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. 5 மணி நேரத்துக்குள் அதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்துள்ளார் துரைமுருகன்.
சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் சென்னை மெரினாவில், அண்ணா சமாதி அருகே இன்று முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கருணாநிதியின் தம்பிகளான கட்சியின் மூத்த தலைவர் துரைமுருகன் உள்ளிட்டோர் 5 மணி நேரத்தில் செய்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை உயிரிழந்தார். அண்ணா சமாதிக்கு அருகே உடலடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று திமுக சார்பில் கோரப்பட்டது. ஆனால், அதை தமிழக அரசு ஏற்கவில்லை.

அதையடுத்து திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டு, நேற்று இரவே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று காலையும் நடந்தது.
விசாரணையின் முடிவில், மெரினாவில் அண்ணா சமாதி அருகே கருணாநிதி உடலடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்று மதியம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உடனடியாக திமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் களத்தில் இறங்கினார். பொதுப் பணித் துறை அதிகாரிகளுடன் இணைந்து, இடம் தேர்வு செய்யப்பட்டது.

அண்ணா சமாதிக்கு வலது புறத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு, உடனடியாக அங்கு பணிகள் துவங்கின. முன்னாள் பொதுப் பணித் துறை அமைச்சர் என்பதால், துரைமுருகனுக்கு என்னென்ன நடவடிக்கைகள் எப்படி எடுக்க வேண்டும் என்பது அத்துப்படி.

5 மணி நேரத்துக்குள்ளாக, அண்ணாவின் அருகில் கருணாநிதியின் உடலடக்கம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், கருணாநிதியின் தம்பிகளான துரைமுருகன் உள்ளிட்ட கட்சியினர் மேற்கொண்டனர்.












Click it and Unblock the Notifications