ஈடு இணையில்லாத கருணையுள்ளவன்... மனங்களை நிறைத்து கண்களைக் குளமாக்கி விட்டுச் சென்ற ஹனீபா

Subscribe to Oneindia Tamil

சென்னை: உண்மையான மதச்சார்பின்மைக்கு வேறு எங்குமே போக வேண்டாம்.. இந்தப் பாட்டு ஒன்றே போதும்.. இஸ்லாமியர்களுக்காப் பாடியப் பாடல் என்றாலும் இஸ்லாமியர்களைப் போலவே இந்துக்களும், பிற மதத்தினரும் அதிகம் பாடிய பாடல், அதிகம் விரும்பிய பாடல், அதிகம் உருகிய பாடல் இதுவாகத்தான் இருக்க முடியும்.

காரணம், அந்தப் பாடலின் வரிகள்.. காரணம், அந்தப் பாடலைப் பாடிய குரல்.. காரணம், நாகூர் இ.எம்.ஹனீபா. கேட்க கேட்க மனசெல்லாம் கரைந்து, கண்களை உடைத்துக் கொண்டு வரும் பாருங்கள் அந்த உருக்கம்.. அதுதான் இந்தப் பாடலின் வெற்றி. ஹனீபாவின் வெற்றி...!

E M Haneefa no more

மனமுருகப் பாடிய பாடல்கள் எத்தனை எத்தனை.. அத்தனைப் பாடல்களும் மத மாச்சரியமின்றி அத்தனை உள்ளங்களையும் புரட்டிப் போட்டவை, நனைத்து நின்றவை.

உடன்பிறப்பே கழக உடன்பிறப்பே என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம் நாடி நரம்பு புடைக்க திமுக தொண்டர்கள் பார்த்த வேலையை விட்டு விட்டு கழக வேலைக்கு ஓடி வருவார்கள்.. அப்படி ஒரு முறுக்கேற்றும் பாடல் அது.

அது மட்டுமா.. அழைக்கிறார் அண்ணா.. ரெக்காட் விற்பனையில் சாதனை படைத்த பாடல்..

ஓடி வருகிறான் உதயசூரியன்.. கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே... இன்னும் இன்னும் திமுகவை புடம் போட்ட தங்கமாய் மக்கள் மத்தியில் கொண்டு சென்ற பாடல்கள் எத்தனை எத்தனை.. திமுகவின் சத்தான வளர்ச்சியில் கருணாநிதிக்கு எத்தனை பங்கு இருக்கிறதோ அதற்கு நிகரான பங்கு ஹனீபாவின் குரலுக்கும் உண்டு.

திமுகவையும், திமுகவின் கொள்கைகளையும் பட்டி தொட்டியெங்கும் கொண்டு சென்ற பாட்டுக்காரர் ஹனீபா.

இவரது தந்தை நாகூரைச் சேர்ந்தவர். தாயார் ராமநாதபுரம். ஹனீபா தனது தாயாரின் ஊரான ராமநாதபுரம், வெளிப்பட்டணத்தில் பிறந்தவர். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் இஸ்மாயில் முகம்மது ஹனீபா. தந்தையின்ஊரையும் சேர்த்து நாகூர் இ.எம். ஹனீபா என்று அழைக்கப்பட்டார். ஆனால் இசை முரசு என்பதுான் இவரது நிரந்தர அடையாளமாக மாறிப் போனது.

இவரைப் போல இசை நிகழ்ச்சிகளை நடத்தியவர்கள் யாரும் இருக்க முடியாது. 15 வயதில் பாடத் தொடங்கி பல ஆயிரம் பாடல்களை பாடிய சாதனையாளர். திராவிட இயக்க முறுக்கு அதிகம் கொண்டவர். அவர் பாடிய பாடல்களில் திராவிட இயக்கப் பாடல்கள்தான் அதிகம். அடுத்து இறைப் பாடல்கள். ராமன் அப்துல்லா, செம்பருத்தி, பாவ மன்னிப்பு உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் பாடியுள்ளார் ஹனீபா.

ராமன் அப்துல்லாவில் வரும் உன் மதமா என் மதமா என்ற பாடலில் மத துவேஷத்தைச் சாடியிருப்பார் ஹனீபா. அதேபோல பாவ மன்னிப்பு படத்தில் வரும் அல்லாவின் பெயரைச் சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி பாடலை டி.எம்.எஸ்ஸுடன் இணைந்து பாடியிருப்பார் ஹனீபா.

பெரியாரின் சீடராக அவருடன் இருந்த ஹனீபா, பின்னர் திமுகவைத் தொடங்கிய அண்ணாவுடன் இணைந்து திமுககாரர் ஆனார். அண்ணாவின் இதயக் கனிகளில் இவரும் ஒருவராக திகழ்ந்தவர். எப்போதும் தன்னுடனேயே இருக்கச் சொல்வார் அண்ணா. அந்த அளவுக்கு ஹனீபா மீது நிறைந்த பாசம் கொண்டவர்.

1953ம் ஆண்டு கைத்தறி நெசவாளர்கள் நலனுக்காக, அவர்கள் நெய்து வைத்த துணிகளை வாங்கி திமுகவினர் ஊர் ஊராக விற்றனர். அப்போது அண்ணா திருச்சியில் துணிகளை விற்றார். அவருடன் ஹனீபாவும் உடன் சென்று தனது கணீர் குரலால் கூவிக் கூவி பாட்டுப் பாடி துணிகளை விற்றார். உடுமலை நாராயண கவி எழுதிய சேலைகள் வேட்டிகள் வாங்குவீர் என்ற பாடலையே உரத்த குரலில் பாடி அவர் விற்ற பாங்கு அனைவரையும் கவர்ந்தது.

"இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன்
பொக்கிஷத்தை மூடுவதில்லை
இல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவன்
ஈடு இணையில்லாத கருணையுள்ளவன்
இன்னல்பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன்
எண்ணங்களை இதயங்களைப் பார்க்கின்றவன்
ஆசையுடன் கேட்பவர்க்கு அள்ளித்தருபவன்
அல்லல் துன்பம் துயரங்களைக் கிள்ளியெறிபவன்
பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன்
பாவங்களைப் பார்வையினால் மாய்க்கின்றவன்
அல்லல்படும் மாந்தர்களே அயராதீர்கள்
அல்லாவின் பேரருளை நம்பி நில்லுங்கள்
அவனிடத்தில் குறையனைத்தும் சொல்லிக்காட்டுங்கள்
அன்பு நோக்குத் தருகவென்று அழுது கேளுங்கள்"

ஒவ்வொரு தமிழனின் உயிர் இருக்கும் வரை மறக்க முடியாத, மனதோடு புதைந்து போன பாடல் இது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+