ஸ்ரீரங்கம்: விஜயகாந்த் மவுனம் ஏன்?: அவர்கிட்டேயே கேளுங்க- தமிழிசை!!
சென்னை: ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் அண்ணா தி.மு.க.வு அரசின் அமைச்சர்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ஸ்ரீரங்கம் தேர்தலில் தே.மு.க.தலைவர் விஜயகாந்த் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காதது குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டி:
பாரதிய ஜனதா கட்சியில் தமிழகத்தில் இதுவரை 13 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளோம். இன்னும் 2 மாதத்தில் 60 லட்சம் உறுப்பினர்களை நாங்கள் சேர்த்து விடுவோம்.

ஸ்ரீரங்கத்தில் பாரதிய ஜனதாவுக்கு மக்களின் ஆதரவு பெருகி வருகிறது. மாநில பொதுச்செயலாளர் நரேந்திரனை ஸ்ரீரங்கம் பொறுப்பாளராக நியமித்து இருக்கிறோம். வாக்குச்சாவடிகளுக்கும் பொறுப்பாளர்களை நாங்கள் நியமித்து இருக்கிறோம்.
ஸ்ரீரங்கம் தேர்தலில் மூத்த தலைவர்கள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். பாரதிய ஜனதா கூட்டணி கட்சி தலைவர்களும் பிரசாரம் மேற்கொண்டு உள்ளனர்.
ஸ்ரீரங்கத்தில் ஆளுங்கட்சியினரால் அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள். பணம் கொடுக்கும்படி கட்டாயப் படுத்தப்படுகிறார்கள். அமைச்சர்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றனர்.
ஆட்சி அதிகாரம் ஸ்ரீரங்கத்தில் முடுக்கி விடப்பட்டுள்ளது. தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை.
ராணிப்பேட்டை தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 10 தொழிலாளர்கள் பலியாகி இருக்கிறார்கள். இது குறித்து தமிழக அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும். தமிழக அரசு டாஸ்மாக் திட்டத்தில் மட்டும் தான் பாஸ் மார்க் வாங்கியிருக்கிறது. மற்ற திட்டங்களில் பெயில் மார்க் தான் பெற்று இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து அவரிடம் ஸ்ரீரங்கம் தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளருக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளிப்படையான ஆதரவு தெரிவிக்கவில்லையே? அவர் பிரசாரத்திற்கு வருவாரா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த தமிழிசை சவுந்தரராஜன், தே.மு.தி.க. எம்.எல்.ஏ. செந்தில்குமார் ஸ்ரீரங்கத்தில் எங்களுடன் பிரசாரத்துக்கு வருகிறார். அங்குள்ள தே.மு.தி.க. தொண்டர்கள் எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
விஜயகாந்தை நாங்கள் சந்தித்து பேசியபோது, எங்களுக்கு முழு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்து இருக்கிறார். தே.மு.தி.க. போட்டியிடுவது போன்று நினைத்து நீங்கள் வேலை பார்க்க வேண்டும் என்று விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.
மேலும் ஸ்ரீரங்கம் தேர்தலில் பாரதிய ஜனதாவும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியிருக்கிறாரே? என்ற கேள்விக்கு, இது தவறான கருத்து. இதை முற்றிலுமாக நான் மறுக்கிறேன். காசு கொடுத்து வாக்கு வாங்க வேண்டிய நிலையில் பாரதிய ஜனதா இல்லை. நாங்கள் ஊழலை எதிர்த்து தான் போராடுகிறோம். ஸ்ரீரங்கம் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடாதது ஏன்? முதலில் அவர்கள் தங்கள் கட்சியின் உட்கட்சி விவகாரங்களை தீர்க்க சொல்லுங்கள். பிறகு பாரதிய ஜனதாவை விமர்சனம் செய்யலாம் என்றார்.












Click it and Unblock the Notifications