கடும் வெயிலில் பொதுக் கூட்டங்கள் நடத்தக் கூடாது - தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
சென்னை: கடுமையான வெயில் நேரத்தில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்கள் நடத்துவதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கும் அதிமுக தேர்தல் பிரசார கூட்டங்கள் பெரும்பாலும் கொளுத்தும் வெயில் நேரத்தில் நடத்தப்பட்டதால், வெயிலின் கொடுமையில் சிக்கி இதுவரை 5 தொண்டர்கள் உயிரிழந்ததுள்ளனர். பின்னர் தற்போது பிரச்சாரம் செய்யும் நேரத்தை மாற்றியுள்ளார் ஜெயலலிதா.

இதையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். வெயிலில் பொதுக்கூட்டங்கள் நடத்த தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் வந்ததையடுத்து கடுமையான வெயில் நேரத்தில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்கள் நடத்துவதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடும் வெயிலில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுவதால், உயிரிழப்புகள் ஏற்படுவது குறித்து புகார் வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. எனவே, கடும் வெயில் நிலவும் நேரங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும்.
மேலும், பொதுக்கூட்டங்கள் நடத்தும் அரசியல் கட்சிகள், கூட்டம் நடைபெறும் இடங்களில் மேற்கூரை அமைக்க வேண்டும் என்றும், குடிநீர், மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. கூட்டங்களில் பங்கேற்க வரும் பொதுமக்களின் நலன் கருதி, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசியல் கட்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications