வாக்குப்பதிவிற்கு 48 மணி நேரம் முன்பாக ‘பல்க் எஸ்.எம்.எஸ்.’ அனுப்ப தடை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி, வாக்குப்பதிவிற்கு 48 மணி நேரம் முன்பாக அரசியல் சார்ந்த மொத்தமான எஸ்.எம்.எஸ்.க்கள் அனுப்ப தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்தமாதம் 16ம் தேதி நடைபெற இருக்கிறது. வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவது, பிரச்சாரம், தேர்தல் அறிக்கைகள் என கட்சிகள் பம்பரமாக செயல்பட்டு வருகின்றன. வரும் வெள்ளிக்கிழமை வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது.

கடந்த தேர்தல்களில் இருந்து வேறுபட்டு, இம்முறை சமூகவலைதளங்கள், எஸ்.எம்.எஸ்.க்கள், வாய்ஸ் எஸ்.எம்.எஸ்.க்கள் என கட்சிகள் வித்தியாசமான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், ‘வாக்குப்பதிவு தினமான மே மாதம் 16-ந்தேதிக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக ஒட்டு மொத்த எஸ்.எம்.எஸ்.களுக்கு (பல்க் எஸ்.எம்.எஸ்.) தடை விதிக்கப்பட்டுள்ளதாக' தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
அதன்படி மே மாதம் 14-ந்தேதி மாலை 6 மணி முதல் 48 மணி நேரத்துக்கு ஒட்டுமொத்தமாக எஸ்.எம்.எஸ்.களை அனுப்பக்கூடாது என்று செல்போன் நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இது மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக வாய்ஸ் எஸ்.எம்.எஸ். அனுப்பக்கூடாது என்றும், அரசியல் கட்சியினர் ரேடியோ மூலம் பிரசாரமும் செய்யக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications