துறைமுகம் காலி.. பழ. கருப்பையா விலகலால்!
சென்னை: அதிமுக எம்.எல்.ஏ. பழ கருப்பையா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதால் அவர் உறுப்பினராக இருந்து வந்த துறைமுகம் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
துறைமுகம் சட்டசபைத் தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பழ. கருப்பையா. இவர் சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தனது எம்.எல்.ஏ பதவியை உடனடியாக ராஜினாமா செய்தார் கருப்பையா.
இந்த ராஜினாமாவை சபாநாயகர் தனபால் ஏற்றுக் கொண்டார். அத்தகவல் தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம் தற்போது துறைமுகம் தொகுதி காலியாக இருப்பதாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே முன்னாள் அமைச்சர் செந்தூர்பாண்டியன் மறைவு காரணமாக கடையநல்லூர் தொகுதி காலியாக உள்ளது. தற்போது கருப்பையா தொகுதியும் காலியாகியுள்ளதால், சட்டசபையில் அதிமுகவின் பலம் 151லிருந்து 149 ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் விரைவில் பொதுத் தேர்தல் வரவுள்ளதால் கடையநல்லூர், துறைமுகம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தப்படாது.