தேர்தல் ஏற்பாடுகள்.... அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை
சென்னை: சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தலைமையிலான குழு இன்று ஆலோசனை நடத்துகிறது.
தமிழகம், புதுச்சேரி மாநிலங்களின் தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காக தலைமைத் தேர்தல் ஆணையாளர் நசீம் ஜைதி, ஆணையாளர்கள் ஏ.கே.ஜோதி, ஓம் பிரகாஷ் ராவத் உள்ளிட்டோர் அடங்கிய குழு நேற்று மாலை சென்னை வந்தது. அந்தக் குழு புதுச்சேரி சென்று தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.
புதுச்சேரியில் ஆய்வுப் பணிகளை முடித்த தேர்தல் ஆணையக் குழு சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று மாலை 6 மணிக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துகிறது. பின்னர் இரவு 7.30 மணியில் இருந்து 8.30 மணிவரை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி உள்ளிட்ட பல அதிகாரிகளை சந்தித்துப் பேசுகின்றனர்.
பின்னர் நாளை காலை 9.30 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை, தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் துறை கண்காணிப்பாளர்கள், டி.ஐ.ஜி., ஐ.ஜி. ஆகியோரை சந்தித்து ஆலோசிக்கின்றனர். அதைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், டி.ஜி.பி., வருமான வரித்துறை ஆணையாளர், கலால் வரித்துறை ஆணையாளர் ஆகியோருடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.