ஸ்ரீரங்கத்தில் புதிய வாக்காளர் பட்டியலை வெளியிட முடியாது: ஹைகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்
சென்னை: ஸ்ரீரங்கம் தொகுதியில் கூடுதலாக இடம் பெற்றுள்ள பெயர்களை நீக்கிவிட்டு புதிய வாக்காளர் பட்டியலை வெளியிட முடியாது என உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை மாற்றியமைக்க வேண்டும்' என்ற தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் இருப்பதாக திமுக வேட்பாளர் ஆனந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு கடந்த 3ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், ‘வாக்காளர் பட்டியலில் மனுதாரர் கூறியுள்ள குறைபாடுகள் இருந்தால், அவற்றை தேர்தலுக்கு முன்பு சரி செய்யப்படும்' என உத்தரவாதம் அளித்தார்.
அதனை பதிவுச் செய்த நீதிபதிகள் ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகளை சரி செய்து, சரியான வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம், இடைத்தேர்தல் நடப்பதற்கு 2 நாட்கள் முன்பாக வெளியிட வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.
தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. இதற்கு அரசியல் கட்சியினர் கடும் விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் சார்பில் வக்கீல் நிரஞ்சன் இன்று ஆஜராகி, ‘கூடுதலாக இடம் பெற்றுள்ள பெயர்களை நீக்கி புதிய வாக்காளர் பட்டியலை வெளியிட முடியாது. எனவே, இந்த நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை மாற்றியமைக்க வேண்டும்' என்று கூறினார்.
இதை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர். தேர்தல் ஆணையம் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் ஏற்கனவே நாங்கள் உத்தரவு பிறப்பித்து விட்டோம். இப்போது தீர்ப்பை மாற்ற முடியாது என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர். இது தேர்தல் ஆணையத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications