ஆட்டோவில் பறந்த மளிகை பொருட்கள்... துரத்திப் பிடித்து மடக்கிய அதிகாரிகளால் பரபரப்பு!
நெல்லை: நெல்லையில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு வழங்குவதற்காக ஆட்டோவில் கொண்டு சென்ற மளிகை பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலை ஓட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் உள்ளன. வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் வினியோகிப்பதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகி்ன்றனர்.

பாளை விஎம் சத்திரம் செக்போஸ்டில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது ஆட்டோவில், மளிகை பொருட்கள் அடங்கிய 400 பாக்கெட் இருப்பது தெரிய வந்தது. அந்த லோடு ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவர் மாரியப்பனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர், விருதுநகரில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் செய்துங்கநல்லூரில் உள்ள மகளிர் சுய உதவி குழுவினருக்கு மாதம்தோறும் மளிகை பொருட்கள் சப்ளை செய்யப்படுவதாகவும், இதற்காக அவர்களிடம் இருந்து தவணை முறையில் பொருட்களை கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். பாளை குலவணிகர்புரத்தில் இருந்து இந்த மளிகை பொருட்களை எடுத்து செல்வதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும் இதற்குரிய ஆவணம் அவரிடம் இல்லை. இதையடுத்து மளிகை பொருட்களை பறிமுதல் செய்து பெருமாள்புரம் போலீசில் ஓப்படைத்தனர். இது தொடர்பாக குடோன் மேலாளர் பழனிசாமியிடம் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications