போர்க்கொடி தூக்கிய 5 பேருக்கு அமைச்சரவையில் இடம்? எடப்பாடி தீவிர ஆலோசனை
அதிமுகவில் கலகக் குரல் எழுப்பி வரும் 5 பேரை அமைச்சரவையில் சேர்ப்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: தமக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வரும் 5 பேருக்கு அமைச்சர் பதவி தருவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் அமைச்சர் பதவி கேட்டு பல கோஷ்டிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் தலைமையில் 11 எம்.எல்.ஏக்கள் கோஷ்டியாக திரண்டனர். அவர்களை அமைச்சர் செங்கோட்டையன்தான் வழிக்குக் கொண்டு வந்தார்.

தோப்பு கோஷ்டி
பின்னர் தோப்பு கோஷ்டி களத்துக்கு வந்தது. மாஜி அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பழனியப்பனும் இந்த கோஷ்டியில் இணைந்து கொண்டு அமைச்சர் பதவி கேட்டு கலகக் குரல் எழுப்பினர்.

எடப்பாடியும் சந்திப்பு
இதனைத் தொடர்ந்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தனர். இச்சந்திப்புகளில் கொங்கு மண்டலத்துக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் தங்களுக்கும் அமைச்சர் பதவி தர வேண்டும் என அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர்.

அமைச்சரவை மாற்றம்
ஒவ்வொரு நாளும் நெருக்கடி முற்றுவதை அடுத்து அமைச்சரவை மாற்றத்துக்கு தயாராகிவிட்டாராம் எடப்பாடி. தற்போதைய நிலையில் 5 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்க வாய்ப்பு இருக்கிறது என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.

5 பேருக்கு பதவி?
ஓபிஎஸ் பதவி வகித்த நிதி அமைச்சர் பதவியை தங்க.தமிழ்ச்செல்வனுக்கும் மாஃபா.பாண்டியராஜனின் கல்வி அமைச்சர் பதவியை இன்பதுரைக்கும் கொடுக்கப்பட இருக்கிறது. மேலும் தஞ்சாவூர் ரங்கசாமி, பெரம்பலூர் தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் ஆகியோரும் அமைச்சர்களாகிறார்களாம்.

சசி ஒப்புதலுக்காக
இப்போது இந்த அமைச்சரவை மாற்ற பட்டியல் சசிகலாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம். அவரது ஒப்புதல் கிடைத்த உடனேயே அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications