தினகரனுக்கு 'நோஸ்கட்'! கட்சி, ஆட்சியை வழிநடத்துவது எடப்பாடிதான்... ஜெயக்குமார் பதிலடி!
கட்சி, ஆட்சியை வழிநடத்துவது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் என தினகரனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.
சென்னை: அதிமுகவை வழிநடத்தப் போவதாக கூறிவரும் டிடிவி தினகரனுக்கு நோஸ்கட் கோடுக்கும் வகையில், அதிமுக கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்துவது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் என அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.
அதிமுக அணிகள் இணையாத நிலையில் கட்சியை வழிநடதுதும் பொறுப்பு தமக்கே உள்ளது; நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் வகுக்க மாவட்ட நிர்வாகிகளுடன் ஆகஸ்ட் 5-ல் ஆலோசனை நடத்த உள்ளேன் என டிடிவி தினகரன் அறிவித்தார்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டி இதை ஏற்கவில்லை. தினகரனை ஒதுக்கி வைத்தது ஒதுக்கியதுதான் என்பதில் எடப்பாடி கோஷ்டி உறுதியாக உள்ளது.
எடப்பாடி தீவிர ஆலோசனை
இது தொடர்பாக கோட்டையிலும் அதிமுக தலைமை அலுவலகத்திலும் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:
இணைப்பையே விரும்புகிறோம்
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை அனைத்து மாவட்டங்களிலும் எழுச்சியுடன் நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதிமுக நிர்வாகிகள் அனைவருமே கூடிவந்தால் கோடி நன்மை என இரு அணிகளும் இணைவதைத்தான் விரும்புகின்றனர்.
கதவுகள் திறந்தே உள்ளன
அனைவரையும் அரவணைத்து செல்வதற்காகவே பேச்சுவார்த்தைக்கான கதவு திறந்தே இருக்கிறது. அதிமுக அணிகள் இணைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுகிறது.
வழிநடத்துவது எடப்பாடிதான்
நாங்கள் அனைவரும் இணைய வேண்டும் என்பதற்காகவே ஓபிஎஸ் அணியினர் பேச்சுவார்த்தை குழுவை கலைத்தபோதும் நாங்கள் கதவை மூடவில்லை. எங்களைப் பொறுத்தவரை அதிமுக கட்சியை, ஆட்சியை வழிநடத்துவது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மட்டும்தான்.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
அதிமுகவை வழிநடத்தும் பொறுப்பு தமக்கே என தினகரன் கூறியிருந்த நிலையில் ஆட்சியை, கட்சியை எடப்பாடியே வழிநடத்துகிறார் என அதிரடியாக பேட்டியளித்திருக்கிறார் ஜெயக்குமார்.