முதல்வர் பதவியை தினகரன் பறித்தால்.... வரிந்து கட்டிக் காத்திருக்கும் எடப்பாடி + 7 எம்.எல்.ஏக்கள்!
ஆர்கே நகரில் வென்று தமது முதல்வர் பதவியை தினகரன் பறித்தால் 7 எம்.எல்.ஏக்களுடன் ஓபிஎஸ் அணியில் கை கோர்க்க தயாராகிவிட்டாராம் எடப்பாடி பழனிச்சாமி.
சென்னை: ஆர்கே நகர் தொகுதியில் பணம், தங்கநகைகளை வாரி இறைத்துக் கொண்டிருக்கும் தினகரன் வெற்றி பெற்று முதல்வர் பதவியை பறித்தால் 7 எம்.எல்.ஏக்கள் சகிதம் மத்திய அரசின் ஆசியுடன் ஓபிஎஸ் அணியுடன் கைகோர்த்து தக்க பாடம் புகட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வியூகம் வகுத்து காத்திருக்கிறது என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தல் பணிகளின் தொடக்கத்தில் தினகரன் வெல்லவே முடியாது என்கிற நிலைதான் இருந்தது. ஆனால் பணம் மற்றும் தங்க நகைகளை தினகரன் தரப்பு வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது.
அதிரவைக்கும் சர்வேக்கள்
முதலில் எடுக்கப்பட்ட உளவுத்துறை சர்வேக்களின் படி தினகரனுக்கு 3-வது இடம் என்பதே கடினம் என்கிற நிலைதான் இருந்து வந்தது. ஆனால் தற்போது பணப்பட்டுவாடாவும் தங்க நகைகள் விநியோகமும் மும்முரமாக நடைபெறும் நிலையில் எடுக்கப்படும் சர்வேக்களால் மத்திய அரசு ஆடிப் போயுள்ளதாம்.
எடப்பாடியின் சர்வே
மத்திய அரசு மட்டுமின்றி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பும் தனியார் நிறுவனம் மூலம் ஒரு சர்வே எடுத்திருக்கிறது. இந்த சர்வேக்களில் தினகரன் சொற்ப வாக்குகளிலாவது வெல்லும் நிலை இருக்கிறது என தெரியவந்துள்ளது.
முதல்வர் நாற்காலிதான்...
தினகரன் தரப்பைப் பொறுத்தவரை ஆர்கே நகரில் வென்றால் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தே தீருவது என்பதில் திடமாக இருக்கிறது. கடந்த கால் நூற்றாண்டு காலமாக இந்த பதவிக்காகத்தானே இத்தனை அவமானங்களை சந்தித்தோம்... நிச்சயம் முதல்வர் நாற்காலியில் அமருவோம் என்பதுதான் தினகரன் தரப்பு திட்டம்.
எடப்பாடி பிளஸ் 7 எம்.எல்.ஏக்கள்
இதை நன்றாகவே உணர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அவரது ஆதரவு 7 எம்.எல்.ஏக்களும் மத்திய அரசின் ஆசியுடன் ஓபிஎஸ்- அணியுடன் கை கோர்க்க தயாராகிவிட்டனராம். ஆனால் தினகரன் தரப்போ 122 எம்.எல்.ஏக்களில் எடப்பாடி பழனிச்சாமியைத் தவிர வேறு யாரும் நம்மிடம் இருந்து போய்விடமாட்டார்கள்.. அந்த 7 எம்.எல்.ஏக்களுக்கு இன்னும் என்ன செய்ய வேண்டுமோ செய்வோம் என ஸ்கெச் போட்டு காத்திருக்கிறதாம்.
மீண்டும் கூவத்தூர்
தற்போதைய நிலையில் தினகரன் வெல்லும் நிலை உருவானால் மீண்டும் ஜெயலலிதா நினைவிட தியானம், கூவத்தூர் கும்மாளம் என அனைத்துவித அவமானங்களும் அரங்கேறுமாம். இதைப்பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாத தினகரன் தரப்பு எட்டிவிடும் தூரத்தில் இருக்கும் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தேவிடுவது என வெறித்தனத்துடன் இருக்கிறது என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.