அமைச்சரவை மாற்றம்... மும்முரமாக இருக்கும் எடப்பாடி! போர்க்கொடியுடன் 'சசி' அமைச்சர்கள்!
அமைச்சரவையை மாற்றி அமைப்பதில் உறுதியாக் இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதற்கு எதிராக சசிகலா ஆதரவு அமைச்சர்கள் போர்க்கொடி தூக்க உள்ளனர்.
சென்னை: அமைச்சரவையை மாற்றி அமைப்பதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படுதீவிரமாக இருக்கிறார். ஆனால் சசிகலா கோஷ்டி அமைச்சர்கள் முட்டுக்கட்டை போடுவதாக கோட்டை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் கோஷ்டிகள் இணையப் போவதாக கூறப்பட்டது. இதனால் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என செய்திகள் அடிபட்டன.
பேச்சுவார்த்தை
ஆனால் இந்த பேச்சுவார்த்தை நடக்குமா? என்பது யாருக்குமே தெரியவில்லை. இப்போதும் கூட பேச்சுவார்த்தை குறித்து இரு கோஷ்டிகளும் பேசி வருகின்றன.
அமைச்சரவை மாற்றம்
இந்நிலையில் டெல்லியின் கோபத்துக்குள்ளாகி இருக்கும் அமைச்சர்களை கழற்றிவிட எடப்பாடி திட்டமிட்டு வருகிறாராம். அத்துடன் சசிகலா ஆதரவு அமைச்சர்களையும் கழற்றிவிடுவது என தீர்மானமாக இருக்கிறாராம்.
ஆலோசனை
இது தொடர்பாக தமது ஆதரவு அமைச்சர்களுடன் எடப்பாடி சில நாட்களுக்கு முன்னர் ஆலோசனை நடத்தினார். எந்த ஒரு அமைச்சரை நீக்கினாலும் எதிராக பேட்டி கொடுக்கத்தான் செய்வார்கள்... அதற்காக டெல்லியை நாம் பகைக்க முடியாதே என கூறியுள்ளார் எடப்பாடியார்.
சமாதானம்
அதேநேரத்தில் அப்படியான கலகக் குரல் எழுப்புவர்கள் சிறிது காலம்தான் பேசுவார்கள்... அதற்கு பிறகு டெல்லி மிரட்டினால் அடங்கிவிடுவார்கள் என கொங்கு கோஷ்டிகள் கூறியுள்ளது. இந்த தெம்பில் விரைவில் அமைச்சரவையை மாற்றி அமைக்க இருக்கிறார் எடப்பாடியார்.