கண்கலங்கிய பழனிச்சாமி.. எடப்பாடியில் கையெடுத்து கும்பிட்டு சொன்ன வார்த்தை! உருகிய அதிமுகவினர்
சேலம்: ''நான் இந்த நிலைக்கு உயர்ந்ததற்கு காரணம் இங்கிருக்கும் மக்கள் தான். ஒரு நாட்டின் முதல் அமைச்சர், கட்சியின் பொதுச்செயலாளர் என்ற 2 அடையாளத்தையும் கொடுத்தவர்கள் யாரென்றால் இங்கு குழுமியிருக்கும் நீங்கள் தான். நான் உங்கள் வீட்டில் ஒருவனாக இருக்கின்றேன். மீண்டும் நான் மனித பிறவியாக பிறந்தார் உங்களின் குடும்பத்தில் ஒருவனாக பிறக்க வேண்டும்'' என்று எடப்பாடி பழனிச்சாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் பிரசாரம் செய்யும்போது கண்கலங்கியபடி கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். மாநிலம் முழுவதும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வந்த எடப்பாடி பழனிச்சாமி இன்று சொந்த தொகுதியான எடப்பாடியில் பிரசாரம் செய்தார்.

இந்த பிரசாரத்தின்போது எடப்பாடி பழனிச்சாமி கண்கள் கலங்க தொகுதி மக்கள் மத்தியில் பேசினார். இது அங்கு கூடியிருந்த அதிமுகவினரை உருக வைத்தது. பிரசார வாகனத்தில் நின்றபடி எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:
''நான் இந்த நிலைக்கு உயர்ந்ததற்கு காரணம் இங்கிருக்கும் மக்கள் தான். நீங்கள் கொடுத்த பதவி. நான் உங்கள் வீட்டில் ஒருவனாக இருக்கின்றேன். மீண்டும் நான் மனித பிறவியாக பிறந்தால் உங்களின் குடும்பத்தில் ஒருவனாக பிறக்க வேண்டும். இவ்வளவு பெரிய பதவியை யாரும் கொடுத்தது கிடையாது.
ஒரு நாட்டின் முதல் அமைச்சர், கட்சியின் பொதுச்செயலாளர் என்ற 2 அடையாளத்தையும் கொடுத்தவர்கள் யாரென்றால் இங்கு குழுமியிருக்கிற நம்முடைய பெரியவர்கள், தாய்மார்கள், இளைஞர்கள். அத்தனை மக்களையும் பாதம் தொட்டு பணிந்து வணங்குகிறேன்'' என்று கூறி கண்கலங்கினார்.
மேலும் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து பேசுகையில், ''ஒரு மனிதன் பிறக்கிறான். வாழ்கிறான்.. இறக்கிறான்.. ஆனால் இடைப்பட்ட காலத்தில் மக்களுக்கு சேவை செய்வது தான் அனைத்து மக்கள் மனதிலேயே நிலைத்து இருக்கும். அப்படி எம்ஜிஆர் மண்ணில் பிறந்தார்.. வாழ்ந்தார்.. சாதனை படைத்தார்.. மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
ஜெயலலிதாவும் மண்ணில் பிறந்தார்.. வாழ்ந்தார். இடைப்பட்ட காலத்தில் சேவை செய்தார்கள்.. மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்றைய தினம் 2 தலைவர்களும் நம்மிடத்தில் இல்லை. 2 தலைவர்களுக்கும் நாம் தான் பிள்ளைகள். இன்று எத்தனையோ கட்சிகள் தமிழகத்தில் இருக்கின்றது. இந்தியாவிலும் இருக்கின்றது. ஆனால் மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள் என்றால் நம்முடைய தலைவர்கள் தான்'' என்றார். இதனை கேட்டவுடன் அங்கிருந்த அதிமுகவினர் ஆர்ப்பரித்தனர்.












Click it and Unblock the Notifications