முட்டை போடுவீங்களா போட மாட்டீங்களா... "அடங்காத" டென்ஷனில் அசைவ பிரியர்கள்
முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் பிரியாணியுடன் இலவசமாக வழங்கப்படும் முட்டை குறித்து மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
சென்னை: முட்டையின் விலையேற்றம் காரணமாக பிரியாணிக்கு இலவசமாக வைக்கப்படும் முட்டை கிடைக்குமா கிடைக்காதா என்ற ஆராய்ச்சியில் அசைவ பிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
முட்டை மிகவும் சத்தான உணவாக கருதப்படுகிறது. 13 கிராம் எடை கொண்ட முட்டையில் 26 சதவீதம் புரதம் இருக்கிறது. மேலும் கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் ஏ, சி, டி, பி6, பி 12, மெக்னீசியம், கால்சியம் உள்ளிட்ட சத்துக்களும், நல்ல கொழுப்புகளும் உள்ளன.
இதனால் வளரும் குழந்தைகளுக்கு முட்டையை கொடுத்தால் அவர்களின் வளர்ச்சிக்கு உதவும். இந்த முட்டை வைத்துக் கொண்டு பல்வேறு உணவு வகைகளை செய்யலாம்.
முட்டையாவது வேண்டும்
ஒரு சிலர் அசைவம் இல்லாமல் உணவு கொள்ளவே மாட்டார்கள். குறைந்த பட்சம் முட்டையாவது இருக்க வேண்டும். கடைகளில் பிரியாணி சாப்பிடும் போது அதனுடன் இலவசமாக வேகவைத்த முட்டையை தருவர். ஒரு முறை வைக்காவிட்டால் அடுத்த முறை கேட்டு வாங்கும் அளவுக்கு முட்டை மீது பிரியம் ஜாஸ்தி.
முட்டை கை கொடுக்கும்
காய்கறிகள் விலை ஏற்றத்தின்போதும் சைவ உணவுக்கு தொட்டுக் கொள்ள முட்டைகளாலான டிஸ்களை பயன்படுத்துவர். சைவ உணவுகளில் அப்பளம் எத்தகைய இடம் பிடித்துள்ளதோ அதற்கு மேலான இடத்தை முட்டையும் பிடித்துள்ளது.
விலையேற்றம்
முட்டையின் கொள்முதல் விலை கடந்த சில நாள்களாக உயர்ந்து கொண்டே வருகிறது. தற்போது சில்லறை விலையில் ஒரு முட்டை 5 ரூபாய் 50 காசுகளாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால் இனி பிரியாணி கடைகளில் இலவசமாக வழங்கப்படும் முட்டையை கொடுப்பார்களா மாட்டார்களா என மக்கள் கவலையடைந்துள்ளனர்.
பிரியாணி விலை ஏற்றம்
முட்டையால் செய்யப்படும் முட்டை மசால், ஆம்லெட், ஆஃப் பாயில், கரண்டி ஆம்லெட், கலக்கி, பொடிமாஸ், முட்டை தோசை உள்ளிட்டவற்றின் விலை கூடும் சூழல் எழுந்துள்ளது. மேலும் முட்டை விலையேற்றத்தால் இலவசமாக கொடுக்கப்படும் முட்டை விலையை சமாளிக்க பிரியாணி விலைகளை கடைக்காரர்கள் ஏற்றுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.