தமிழகத்தில் எதிர்பார்த்ததை விட அதிகமாக வெற்றி பெறுவோம்: இல.கணேசன்
கோவை: இந்தியாவை பொறுத்த வரையில் எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் ஓர் நிலை, எல்லோரும் இந்த நாட்டின் மக்கள் இதை அறியாமல் பிரியங்கா பிரசாரம் செய்கிறார் என்று பாஜக மூத்த தலைவரும் தென்சென்னைத் தொகுதி பாஜக வேட்பாளருமான இல.கணேசன் கூறியுள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

தமிழகம் முழுவதும் எதிர்கட்சிகளுக்கு சவால் விடும் வகையிலான ஒரு வலுவான கூட்டணியாக எங்கள் கூட்டணி அமைந்துள்ளது. தேர்தல் முடிவு வரும்போது மற்றவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான எண்ணிக்கையில் வெற்றி பெறுவோம்.
பிரியங்கா காந்தி தன்னுடைய சகோதரர் போட்டியிட கூடிய தொகுதியில் பிரசாரம் செய்யும் போது வெளியாட்களை வெற்றி பெறச்செய்யலாமா? என்று பிரசாரம் செய்துள்ளார்.
இதே பிரசாரத்தை அவரது தாய் போட்டியிடக்கூடிய தொகுதிகளில் நாங்களும் வெளியாட்கள் இந்த நாட்டை ஆள்வதற்கு அனுமதிக்கலாமா? என்று கேட்டால் எப்படியிருக்கும் என்பதை சிந்திக்காமல் பிரியங்கா பேசுகிறார்.
இந்தியாவை பொறுத்த வரையில் எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் ஓர் நிலை, எல்லோரும் இந்த நாட்டின் மக்கள் என்று இருக்கும் நிலையில் பிரியங்காவின் இந்த பிரசாரம் அர்த்தமற்றது.
வால்பாறை பகுதியில் பல்வேறு பிரச்சினை இருப்பது தெரிய வருகிறது. மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதி இல்லை. வெள்ளிமுடி மலை கிராமத்தில் மின்வசதி இல்லை. வால்பாறை அரசு மருத்துவமனையின் வெளித்தோற்றம் பிரமாண்டமாக இருந்தாலும் சிறப்பான சிகிச்சை இல்லை.
தோட்ட தொழிலாளர்கள் சொந்த வீடு இல்லாமல் சிரமப்படுகின்றனர். தற்போது உள்ள குடியிருப்புகளை தொழிலாளர்களுக்கு சொந்தமாக வழங்க அரசு, தோட்ட நிர்வாகங்களுக்கு இழப்பீடுகள் வழங்கி தொழிலாளர்களுக்கு வீடுகளை சொந்தமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications