பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும்- இளங்கோவன் 'வார்னிங்'
சென்னை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு குறைந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இளங்கோவன் இன்று வெளியிட்ட அறிக்கை:
மத்திய பா.ஜ.க. அரசு ஆட்சி அமைந்ததும் வருமானத்தை பெருக்குவதற்காக பல்வேறு வரிகளை தொடர்ந்து மக்கள் மீது விதித்து வருகிறது. மத்திய காங்கிரஸ் அரசு ஆட்சி செய்த 2008ஆம் ஆண்டில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 140 டாலராக இருந்த நிலையில் இருந்து தற்போது 30 டாலராக விலை வீழ்ச்சியடைந்திருக்கிறது.
மே 2014ல் காங்கிரஸ் ஆட்சியின் போது 115 டாலராக கச்சா எண்ணெய் விலை இருந்த போது பெட்ரோல் விலை ரூ.74.60 காசாகவும் டீசல் விலை ரூ.60.05 ஆகவும் இருந்தது. தற்போது பெட்ரோல் விலை ரூ.59.45;, டீசல் விலை ரூ.45.36 ஆகவும் உள்ளது. ஏறத்தாழ 70 சதவிகிதம் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் அதற்கு இணையாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நரேந்திரமோடி அரசு தயாராக இல்லை.

உற்பத்தி வரி உயர்வு
மத்திய பா.ஜ.க. அரசின் நடப்புகணக்கு பற்றாக்குறையை சரிகட்டுவதற்காக சர்வதேச சந்தையில் கச்சாஎண்ணெய் விலை வீழ்ச்சியை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பலமுறை உற்பத்தி வரியை உயர்த்தி கஜானாவை நிரப்பிக்கொண்டு வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலில் மன்மோகன்சிங் ஆட்சிக்காலத்தில் உற்பத்தி வரி ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் ரூ.5 மட்டுமே இருந்தது. தற்போது நரேந்திரமோடி ஆட்சியில் இது ரூ.20.48 ஆக உயர்ந்திருக்கிறது. அதேபோல ஒரு லிட்டர் டீசல் விலையில் ரூ.15.83ஆக உற்பத்தி வரி உயர்த்தப்பட்டுள்ளது.

மக்கள் விரோத நடவடிக்கை
இதன்மூலம் ஓராண்டுக்கு 1 லட்சத்து 48 ஆயிரத்து 977 கோடி உற்பத்தி வரியாக விதிக்கப்பட்டு வருமானத்தை மத்திய அரசு பெருக்கிக்கொண்டுள்ளது. இதைவிட அப்பட்டமான மக்கள் விரோத நடவடிக்கை எதுவும் இருக்க முடியாது.

அரசியல் மோசடி
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை மக்கள் மீது சுமத்தாமல் ஆண்டுக்கு ரூபாய் 2 லட்சத்து 34 ஆயிரம் கோடி மானியமாக மத்திய காங்கிரஸ் அரசு வழங்கி வந்தது. ஆனால் பா.ஜ.க. அரசோ பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் உற்பத்தி விலையை உயர்த்தி மக்களுக்கு சேர வேண்டிய பயனை தொடர்ந்து அபகரித்து மக்களை ஏமாற்றி வருகிறது. இதை விட ஒரு அரசியல் மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது.

உடனே குறைக்க வேண்டும்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 70 சதவிகித வீழ்ச்சிக்கு இணையாக ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.20, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.15 என்கிற விலையில் நரேந்திரமோடி அரசு விலை குறைப்பு செய்து மக்களுக்கு உடனடியாக வழங்கவேண்டும். இதை மத்திய பா.ஜ.க. அரசு வழங்க மறுக்குமேயானால், அதற்குரிய விளைவுகளை விரைவில் சந்திக்க நேரிடும்.
இவ்வாறு இளங்கோவன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications