ஜெ.-மோடி சந்திப்பை தப்பாக நினைக்காதீர்கள் என்றது எப்படி தப்பாகும்? இளங்கோவன் அதிரிபுதிரி விளக்கம்
சென்னை: மோடி-ஜெயலலிதா சந்திப்பை தப்பாக நினைக்காதீர்கள் என்று சொன்னது தப்பாகாது என்று காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் இளங்கோவன் விளக்கம் கொடுத்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவை சமீபத்தில் பிரதமர் நரேந்திரமோடி போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசி, மதிய விருந்து சாப்பிட்டு சென்றார்.
இதுகுறித்து விமர்சனம் செய்த காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுகையில், "50 நிமிடங்கள் இருவரும் தனிமையில் என்ன செய்தாருப்பார்கள். யாரும் தப்பாக நினைக்க வேண்டாம். வயதான காலத்தில் தப்பு ஏதும் நடந்திருக்காது என்று எனக்கு தெரியும்" என்றெல்லாம் வாய்க்கு வந்ததை பேசினார்.

திருச்சியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், இருவருக்கும் கள்ள உறவு உள்ளது என்று இரட்டை அர்த்தத்தில் பேசினார்.
இந்த பேச்சுக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை தீவிரமாக்கியுள்ள நிலையில், சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களை சந்தித்து விளக்கம் கொடுத்தார் இளங்கோவன். அவரது விளக்கத்தை பாருங்கள்.
இளங்கோவன் கூறியதாவது: முதல்வரையோ, பிரதமரையோ அவமானப்படுத்துவது என் நோக்கமல்ல. 'அவர்கள் சந்தித்ததை யாரும் தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம்' என்றுதான் நான் கூறியுள்ளேன். தப்பாக நினைக்காதீர்கள் என்றுதானே நான் சொன்னேன். எனவே நான் சொன்னதில் தவறு இல்லை.
பாஜக மற்றும் அதிமுக நடுவே கள்ள உறவு உள்ளது என்றுதான் நான் கூறினேன். அதை யாரும் தப்பாக புரிந்துகொள்ள வேண்டாம். பத்திரிகைகள்தான் தப்பாக புரிந்து கொண்டுள்ளன. நான் சொன்னது தப்பான நோக்கத்தில் கிடையாது.
பாஜக மேலிட தலைவர்கள் ஜெயலலிதாவை அவ்வப்போது சந்திக்கிறார்கள். இங்குள்ள பாஜக தலைவர்கள் எதிர் நிலைப்பாட்டை கொண்டுள்ளார்கள் என்பதற்காகத்தான் கள்ள உறவு என்ற வார்த்தையை கூறினேன். நான் கூறியதில் எந்த தப்பும் இல்லை. எனவே மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நீதிமன்றத்தில் அதிமுக தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கையும் சந்திப்பேன். இவ்வாறு இளங்கோவன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications