தமிழக காங். மீண்டும் உடைகிறது.... இளங்கோவனுக்கு ஆதரவாக 38 மாவட்ட தலைவர்கள் ராஜினாமா?
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக 38 மாவட்ட தலைவர்கள் பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் உடையும் நிலை உருவாகி உள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே.வாசன் வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் திமுக அணியிலும், தமாகா, மக்கள் நலக் கூட்டணி- தேமுதிக அணியிலும் இடம்பெற்றது.

சட்டசபை தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து இளங்கோவன் ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதம் டெல்லி மேலிடத்தில் ஏற்கப்படுமா? அல்லது ஏற்கப்படாதா? என்பது இன்னும் உறுதியாகவில்லை.
இந்த நிலையில் இளங்கோவன் ராஜினாமா கடிதம் கொடுத்ததாக வெளியான தகவல் கட்சியினரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இளங்கோவன் ஆதரவு மாவட்ட தலைவர்களான மத்திய சென்னை ரங்கபாஷ்யம், காஞ்சி வடக்கு வி.ஆர்.சிவராமன் உட்பட 38 மாவட்ட தலைவர்கள் இன்று மணப்பாக்கத்தில் உள்ள இளங்கோவன் வீட்டில் கூடினார்கள். அவர்கள் அனைவரும் மாவட்ட தலைவர் பதவியையும் ராஜினாமா செய்யப் போவதாக இளங்கோவனிடம் தெரிவித்தனர். ஆனால் இளங்கோவன் அவர்களை சமாதானப்படுத்தினார்.
அத்துடன், நானாகத்தான் பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன். மேலிடம் என்னை திருப்பி அழைத்தாலும் தலைவர் பதவியில் நீடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் யாரும் கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம். அது கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒரு பிளவை சந்திக்கும் நிலையில் உள்ளது.












Click it and Unblock the Notifications