அரசு பள்ளிகளுக்கு உதவும் முதியவர்.. இவரை விட பெரிய பணக்காரர் யாராவது இருக்காங்களா.!
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் பிச்சை எடுத்து கிடைத்த ரூ.50,000 பணத்தை கொண்டு அரசு பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்களை வழங்கி முதியவர் ஒருவர் அனைவரையும் நெகிழ செய்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவரே இந்த அற்புத பணியை செய்துள்ளார். முதியவர் பாண்டியன் நீண்ட காலமாக பிச்சை எடுத்து வாழ்ந்து வந்துள்ளார்.

தான் பிச்சை எடுத்து சேர்த்த பணத்தை கொண்டு 14 அரசு பள்ளிகளுக்கு தேவயான நாற்காலிகள், மேஜைகள், மற்றும் நோட்டுகள் உட்பட அத்தியாவசிய உபகரணங்களை வாங்கி தந்துள்ளார். தற்போது உடன்குடி, சாத்தான்குளம், பன்னம்பாறை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள 14 அரசு பள்ளிகளுக்கு உபகரணங்கள் வாங்கி தந்துள்ளார்.
இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய முதியவர் பாண்டியன், தாம் பிச்சை எடுத்து வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டார். முன்பெல்லாம் கடைகளில் பிச்சை எடுக்க சென்றால் 1 ரூபாய், 2 ரூபாய் தருவார்கள். தற்போது 10 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை தமக்கு கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் பணம் அளிப்பதாக கூறினார்.
பிச்சை எடுப்பதில் என் தேவைக்கு அதிகமாகவே வருமானம் வர துவங்கியது. எனவே அருகிலுள்ள அரசு பள்ளிகளுக்கு சென்று பள்ளி நிர்வாகத்திடம் கேட்பேன். உங்கள் பள்ளிகளில் எல்லா பொருட்களும் உள்ளதா,? இல்லை ஏதாவது வேண்டுமா என ஒவ்வொரு பள்ளியாக போய் கேட்டு வருவேன்.
அவர்கள் டிரம், நாற்காலிகள், பாய் ,நல்ல குடி தண்ணீர் வசதி (ஆர்ஓ வாட்டர்) என எது கேட்டாலும் தம்மால் முடிந்ததை செய்து தருவதாக கூறினார்.
பள்ளிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் பெருந்தலைவர் காமராஜரை பார்த்து தான் எனக்கும் வந்தது என்றார் இந்த அற்புத மனிதர் பாண்டியன். பண வசதி படைத்தவர்கள் அரசு பள்ளிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என்பதே இந்த பெரும்பணக்காரரின் கோரிக்கை.
ஆம் பணம் வைத்திருப்பவன் மட்டுமே பணக்காரன் அல்ல என்பது உங்களுக்கும் இப்போது புரிந்திருக்கும் தானே...












Click it and Unblock the Notifications