பணப்பட்டுவாடா புகார்கள்.. ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து.. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா கொடுத்த ஆதாரங்கள் சிக்கிய நிலையில் சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
டெல்லி: பணப்பட்டுவாடா புகார்களை தொடர்ந்து, ஆர்கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்கே.நகர் தொகுதிக்கு வரும் புதன்கிழமை இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தங்களின் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தன.

இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு உட்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் 89 கோடி ரூபாய் வரை ஆர்கே நகரில் செலவு செய்ததற்கான ஆவணம் சிக்கியது.
மேலும் அமைச்சருகளும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கான பணத்தை பெற்றது அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பான சோதனை அறிக்கையை வருமான வரித்துறை ஞாயிற்றுக்கிழமை சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ராவிடம் வழங்கியது.
இதையடுத்து அறிக்கையுடன் டெல்லி சென்ற விக்ரம் பத்ரா அதனை தலைமை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்ததாக தெரிகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி, தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெறும் சூழல் வந்த பிறகு தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications