வாக்காளர் பட்டியலில் தவறுதலாக பெயர் நீக்கப்பட்டால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை- சக்சேனா
சென்னை: வாக்காளர் பட்டியலில் இருந்து தவறுதலாக பெயர் நீக்கப்பட்டிருந்தால் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரது பேட்டியில், "வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டத்தின் அடிப்படையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், தொகுதிக்குள் இடமாற்றம் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்பிக்கப்பட்ட 9.61 லட்சம் மனுக்களில் 9.25 லட்சம் மனுக்கள் ஏற்கப்பட்டன. பெயர்களை நீக்குவதற்காக அளிக்கப்பட்ட 1.62 லட்சம் மனுக்களில் 1.59 லட்சம் மனுக்கள் ஏற்கப்பட்டன. பெயர் திருத்தத்துக்காக அளிக்கப்பட்ட 3.86 லட்சம் மனுக்களில் 3.75 லட்சம் மனுக்கள் ஏற்கப்பட்டன. தொகுதிக்குள் மாற்றங்களைச் செய்ய தாக்கல் செய்யப்பட்ட 1.41 லட்சம் மனுக்களில் 1.28 லட்சம் மனுக்கள் ஏற்கப்பட்டன.

இறந்த வாக்காளரின் பெயரை நீக்க வேண்டும் என்றால், அவரது உறவினர் கூறியபடியோ அல்லது அவருக்கான இறப்பு சான்றிதழின் அடிப்படையிலோ தான் செயல்பட வேண்டும் என்று நான் தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளேன். ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஒரு வாக்காளரின் பெயர் இருந்தால் அதை நீக்குவதற்கான மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. எந்த இடத்தில் அந்த வாக்காளர் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
ஏ.எஸ்.டி. பட்டியல் முழு அளவில் தயாராகவில்லை. இந்த பட்டியலை தயாரிப்பதில் தேர்தல் நடத்தும் அதிகாரி, உதவி அதிகாரி ஆகியோர் பொறுப்பு வகிக்கின்றனர். எனவே ஏதாவது தவறு நேரிட்டால் அவர்கள்தான் பொறுப்பாக ஆகிவிடுகிறார்கள். உயிரோடு இருப்பவர்களை இறந்தோர் பட்டியலில் சேர்த்து, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியதாக தி.மு.க புகார் கூறியுள்ளது. ஆனால் இதுபற்றி குறிப்பிட்டு என்னிடம் புகார் கடிதங்கள் தரப்படவில்லை என்றாலும், அதில் தவறு இருந்தால் அதற்கு தேர்தல் நடத்தும் அதிகாரி, உதவி அதிகாரி ஆகியோர் பொறுப்பேற்பார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இறந்ததாக கூறி பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டதாக, அறிவிக்கப்பட்டு இருந்தால் அதுபற்றி தேர்தல் அதிகாரியிடம் முறையிடலாம். அவர் பெயர் உடனே மீண்டும் சேர்க்கப்படும். இறந்ததாக அறிவிக்கப்படும் பட்டியல் இறுதிப்பட்டியல் அல்ல. ஆதார் தகவல்களை வாக்காளர் தகவல்களுடன் இணைக்கும் பணியில், 2.79 கோடி மக்களின் தகவல்கள் இணைக்கப்பட்டுவிட்டன. அவர்களிடம் இதுபற்றி இமெயில், எஸ்.எம்.எஸ் மற்றும் சிறப்பு மென்பொருள் மூலம் தகவல் அளிக்கப்படும். ஆதார் இணைப்பு பற்றியும், ஏ.எஸ்.டி பட்டியல் பற்றியும் 24 ஆம் தேதி மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங்கில் ஆலோசனை நடத்தவுள்ளேன்.
வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு வசதியாக அக்டோபர் மாத மத்தியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. புதிதாக பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தத்துக்கு விண்ணப்பிக்கலாம். இந்த திருத்தங்கள் செய்யப்பட்ட பிறகு அடுத்த ஆண்டு ஜனவரி 10-ந் தேதியன்று புதிதாக வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
உடல் நலக்குறைவால் முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் 11 ஆம் தேதி மரணமடைந்தார். எனவே அவரது கடையநல்லூர் தொகுதி காலியாக இருப்பதாக தமிழக சட்டசபை செயலகம் கடந்த 17 ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதை இந்திய தேர்தல் கமிஷனிடம் அனுப்பி வைக்கவுள்ளேன். அங்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டுமா அல்லது பொதுத் தேர்தலின்போது தேர்தல் நடத்தலாமா என்பது பற்றி தேர்தல் கமிஷன் முடிவு செய்யும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications