மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறையின் சீல் வெயிலால் உருகியது- கடலூரில் பரபரப்பு
கடலூர்: கடலூர் லோக்சபா தொகுதியில் ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசு பெரியார் கலை கல்லூரியில் உள்ள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
தேர்தல் பார்வையாளர் மற்றும் வேட்பாளர்கள், ஏஜெண்டுகள் முன்னிலையில் அந்த அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அந்த கல்லூரிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சி.சி.டி.வி கேமரா மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கல்லூரியில் 2 ஆவது மாடியில் திட்டக்குடி, விருத்தாசலம் தொகுதி ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு வைக்கப்பட்டிருந்த "சீல்" நேற்று திடீரென்று வெயில் வெப்பம் தாங்காமல் உருகியது.
அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த துணை ராணுவத்தினர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் கலெக்டர் கிர்லோஷ்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டார்.
அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று அவர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.