விரைவில் தேர்தல் நடக்கும்.. இரட்டை இலை சின்னத்தையும் மீட்போம் - ஓபிஎஸ் அதிரடி
தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடக்கும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
நாகை: விரைவில் தேர்தல் நடக்கும் என்றும் இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அதிமுகவில் பிளவுபட்டுள்ள இரு அணிகளும் இணைந்து விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தை தொடங்கப்படவே இல்லை. மேலும், இரு அணியினரும் மாறுபட்ட கருத்துக்களை கூறி வந்ததால் பேச்சுவார்த்தைக்கு இணக்கமான சூழலும் உருவாகவில்லை.

ஓபிஎஸ் அணி விதித்த நிபந்தனையை ஏற்க பழனிசாமி அணியினர் தயாராக இல்லை. அதே நேரத்தில் நிபந்தனை எதுவும் இன்றி பேச தயாராக இல்லை என்று ஓபிஎஸ் அணியினர் கூறி விட்டனர். இதுபோன்று இரு அணியினரும் மாறி மாறி பேசி வந்ததால் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.
இதையடுத்து ஓபிஎஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். இந்தப் பயணத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து கருத்துக்களை கேட்டு வருகிறார் ஓபிஎஸ். அந்த வகையில் இன்று நாகையில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியினரின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஓ.பன்னீர்செல்வம், இரு அணிகளும் இணையும் என்ற தகவலை தற்போதைய அமைச்சர்கள் தவறாக கூறி வருவதாகவும் எங்களது கோரிக்கையை ஏற்க பினாமி அரசு தவறிவிட்டது என்றும் குற்றம்சாட்டினார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வர நீதிபதி தலைமையில் விசாரணை வேண்டும் எனக் கூறிய ஓபிஎஸ், குடும்ப அரசியல் ஒடுக்கப்படும் வரை தர்மயுத்தம் தொடரும் என்றார். மேலும் விரைவில் தேர்தல் நடக்கும், விரைவில் இரட்டை இலை சின்னத்தை மீட்போம். தேர்தல் நடைபெற வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications