அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல்: வாக்குச்சீட்டா? மின்னணு இயந்திரமா?- ஆய்வில் மாநில தேர்தல் ஆணையம்
சென்னை: தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்புகளில் உள்ளவர்களின் பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதம் 22ம்தேதி முடிவடைகிறது. இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
உள்ளாட்சித் தேர்தலுக்கு மின்னணு எந்திரத்தை பயன்படுத்தலாமா என்று ஆலோசனை நடந்து வருகிறது. வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடத்தினால் கூடுதல் செலவு ஏற்படும் என்பதால் எத்தகைய ஓட்டுப்பதிவை நடத்துவது என்பது பற்றி மாநில தேர்தல் ஆணையம் ஆய்வில் ஈடுபட்டுள்ளது.
சட்டசபை தேர்தல் முடிந்து அதிமுக ஆட்சி பதவியேற்று 50 நாட்களை எட்டப்போகிறது. அதிமுக, திமுக தவிர சில கூட்டணி எம்எல்ஏக்கள் மட்டுமே சட்டசபைக்குள் காலடி எடுதது வைத்துள்ள நிலையில் உள்ளாட்சி தேர்தலில் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுங்கட்சி மட்டுமல்லாது எதிர்கட்சியினரும் தீவிர தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
தமிழகத்தில், 12 மாநகராட்சி, 125 நகராட்சி, 561 நகர பஞ்சாயத்து ஆகியவை, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளாக வரையறுக்கப்பட்டு உள்ளன. இதேபோல, 32 மாவட்ட பஞ்சாயத்து, 385 பஞ்சாயத்து யூனியன், 12 ஆயிரத்து, 618 கிராம பஞ்சாயத்து ஆகியவை, கிராம உள்ளாட்சி அமைப்புகளாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தல்
தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்புகளில் உள்ளவர்களின் பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதம் 22ம்தேதி முடிவடைகிறது. இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

மேயர் தேர்தலில் மாற்றம்
தமிழ்நாட்டில் உள்ள மேயர் பதவிகளுக்கு முன்பு நேரடி தேர்தல் நடத்தப்பட்டு வந்தது. தற்போது கவுன்சிலர்கள் ஓட்டு போட்டு மேயர்களை தேர்வு செய்வார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

முன்கூட்டியே நடத்த திட்டம்
எனவே உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த பிறகு மேயர் தேர்தலுக்கு ஒரு வார கால அவகாசம் தேவைப்படும். இதை கருத்தில் கொண்டு ஏற்கனவே திட்டமிட்ட காலத்துக்கு, ஒரு வாரத்துக்கு முன்பு உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பரில் அறிவிப்பு
உள்ளாட்சிகளுக்கான தேர்தல் தேதி செப்டம்பர் மாதம் 2வது வாரம் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. அதற்கு வசதியாக நிலுவையில் உள்ள கோப்புகளை சரி பார்த்து பணிகளை முடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மின்னணு இயந்திரம்
உள்ளாட்சித் தேர்தலுக்கு மின்னணு எந்திரத்தை பயன்படுத்தலாமா என்று ஆலோசனை நடந்து வருகிறது. மின்னணு எந்திரங்கள் மூலம் ஓட்டுப்பதிவு நடத்தினால் தேர்தலை நடத்தி முடிப்பது மிகவும் எளிதாக இருக்கும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வாக்குச்சீட்டுகள்
2007மற்றும், 2011ல், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி நடத்தப்பட்டன. ஆனால், கிராம உள்ளாட்சி தேர்தல், ஓட்டுச்சீட்டுகள் மூலம் நடத்தப்பட்டன. வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடத்தினால் கூடுதல் செலவு ஏற்படும் என்பதால் எத்தகைய ஓட்டுப்பதிவை நடத்துவது என்பது பற்றி மாநில தேர்தல் ஆணையம் ஆய்வில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுக மனு
இதனிடையே லோக்சபா, சட்டசபை தேர்தல்களைப் போல, வரும் உள்ளாட்சி தேர்தலில், கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஓட்டுப்பதிவுக்கு, மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்துவதை, கட்டாயமாக்க உத்தரவிட வேண்டும் என்று திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வெளி மாநில அதிகாரிகள்
இதேபோல, உள்ளாட்சித் தேர்தல் பணிகளுக்கு, மாநில அரசு அதிகாரிகளை, தேர்தல் அதிகாரிகளாக நியமிக்காமல், மத்திய அரசு மற்றும் வெளி மாநில அதிகாரிகளை நியமிக்கக் கோரியும், திமுக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இட ஒதுக்கீடு
2011 மக்கள் தொகைப்படி, பெண்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கி, வார்டுகளை மறுவரையறை செய்து, தேர்தல் நடத்தும்படி, தமிழக அரசுக்கும், மாநில தேர்தல் கமிஷனுக்கும் உத்தரவிடக் கோரியும், திமுகவின் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்துள்ளார்.












Click it and Unblock the Notifications