நாட்டிலேயே முதன்முறையாக ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு உதவும் திட்டம் அறிமுகம்
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு உதவும் வகையில் நாட்டிலேயே முதன்முறையாக எலெக்டோரல் அசிஸ்டண்ட் சிஸ்டம்(இசி) அறிமுகப்படுத்தப்படுகிறது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இடைத்தேர்தல் நடக்கும் ஆர்.கே. நகர் தொகுதியில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 172 ஆண்கள், 1 லட்சத்து 22 ஆயிரத்து 992 பெண்கள் மற்றும் 77 திருநங்கைகள் உள்பட 2 லட்சத்து 43 ஆயிரத்து 241 வாக்காளர்கள் உள்ளார்கள். வாக்குச்சாவடி அனைத்தும் கண்காணிப்பு கேமரா மற்றும் நுண்பார்வையாளர்கள் மூலம் கண்காணிக்கபட உள்ளது. பதட்டமான வாக்குச்சாவடிகள் என 28 வாக்குச்சாவடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.
தொகுதியில் இருக்கும் பொது இடங்களில் 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் டிவி சேனல்களில் வாக்குச்சாவடிகளின் செயல்பாடுகள் ஒளிபரப்பப்படும்.
இந்தியாவிலேயே முதல்முறையாக இந்த தேர்தலில் எலெக்டோரல் அசிஸ்டண்ட் சிஸ்டம்(இசி) அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்படி வாக்காளர்கள் இமெயில், போன், எஸ்.எம்.எஸ். மூலம் தாங்கள் வாக்களிக்க வேண்டிய மையம் இருக்கும் இடம், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம். இத்திட்டம் வெற்றி பெற்றால் அனைத்து தேர்தல்களிலும் அறிமுகம் செய்வோம்.
ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை வழங்குவதாக எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. ஒரு வேட்பாளர் ரூ.28 லட்சம் செலவு செய்யலாம். வேட்பாளர்கள் தங்களின் முதல் கணக்கு விவரங்களை அளித்துள்ளனர். அதை விரைவில் எங்கள் இணையதளத்தில் வெளியிடுவோம். தொகுதியில் பிரச்சாரம் செய்த போலீஸ் அதிகாரி பற்றி டிஜிபியிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது என்றார்.