புயல் ஓய்ந்து 4 நாட்களாகியும் சென்னைக்கு மின்சார சப்ளை வழங்க முடியாமல் தமிழக அரசு திணறல்
4 நாட்களுக்கு முன்பு வர்தா புயல் ஏற்படுத்திய சேதத்தால் இன்னமும் சென்னையில் மின் இணைப்புகள் சீரடையவில்லை.
சென்னை: வர்தா புயல் கரையை கடந்து விட்ட நிலையிலும், தொடர்ந்து 4வது நாளாக சென்னையில் நிலைமை சீரடையவில்லை.
வர்தா புயல் திங்கள்கிழமை கரையை கடந்தது. பாதுகாப்புக்காக அன்று மதியம் முதல் மின்சாரத்தை மின்வாரியம் தடை செய்திருந்தது. புயலின்போது மின் கம்பங்கள் சாய்ந்தன. எனவே, சென்னை புறநகர் பகுதிகள் இன்னும் இருளில்தான் இருக்கிறது. கொசுவத்தி வைக்க கூட மின்சாரம் இன்றி கொசுக்கடியில் மக்கள் தவிக்கிறார்கள்.

ஒரு சில இடங்களில் மட்டுமே மின் வினியோகம் சீரடைந்துள்ளது. அங்கும்கூட, நிலையாக மின்சாரம் நிற்பதில்லை. தரமணி, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் துணை மின்நிலையங்களை சீரமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது புற நகர் பிரச்சினைக்கு முக்கிய காரணம்.
வடசென்னையின் வியாசர்பாடி, கொடுங்கையூர், மூலக்கடை, மாதவரம், பெரம்பூர், ஓட்டேரி, புளியந்தோப்பு, திருவிக நகர், பேசின் பிரிட்ஜ் பகுதிகளிலும், தென் சென்னையில் நாராயணபுரம், பள்ளிக்கரணை, மேடவாக்கம், வேங்கைவாசல், சந்தோஷ்புரம் உள்பட சுற்றியுள்ள இடங்களிலும் மின்வினியோகம் சீராகவில்லை.
மின்சாரம் இன்றி, வீடுகளில் மோட்டார் உபயோகிக்க முடியாததால், குடிக்கவும், குளிக்கவும் கூட நீரின்றி பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வடசென்னை, தாம்பரம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டும், சாலை மறியல் போராட்டமும் நடத்தி வருகின்றனர். மின்சாரம், குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் நகரமே போர் பாதித்த பூமி போல காட்சியளிக்கிறது.
போதிய ஊழியர்களும், மின்வாரிய உபகரணங்களும் இல்லாததே இந்த நிலைக்கு காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications