புத்துணர்வு முகாமை எட்டிப்பார்த்த கொம்பன்... தெறித்து ஓடிய பாகன்களும் கோவில்யானைகளும்
மேட்டுப்பாளையம்: கோவில் யானைகளுக்கான புத்துணர்வு நலவாழ்வு முகாம் இன்று மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் துவங்கிய நிலையில், முகாமுக்குள் காட்டு யானை ஒன்று நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காட்டு யானையை கண்டு கோவில் யானைகளும், பாகன்களும் தெறித்து ஓடிய காட்சி திகிலூட்டியது. வனத்துறை அதிகாரிகள் பட்டாசு வெடித்து காட்டுயானையை விரட்டினர்.
அ.தி.மு.க. ஆட்சி என்றால் தவறாமல் நடக்க கூடியது யானைகள் சிறப்பு நல்வாழ்வு முகாம் நடைபெறுவது வழக்கம். 2003-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 3 முறை நடந்துள்ளது. 2003ம் ஆண்டு 55 யானைகளுக்கு, 30 நாட்கள் முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் நடந்த இந்த முகாம், 2004ம் ஆண்டில் 65 யானைகளுக்கு 48 நாட்கள் என விரிவுபடுத்தப்பட்டது. 2005ம் ஆண்டு 63 யானைகளுக்கும் முகாம் நடத்தப்பட்டது.
ஆட்சி மாற்றம் காரணமாக 2006 முதல் 2010 வரையிலான காலத்தில் யானைகள் முகாம் நடக்கவில்லை. தொடர்ந்து 2011ம் ஆண்டில் அ.தி.மு.க மீண்டும் பொறுப்பேற்றபின், யானைகள் முகாம் மீண்டும் தொடர்ந்தது. அப்போது முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் 37 யானைகளுக்கு முகாம் நடத்தப்பட்டது.
தேக்கம்பட்டிக்கு மாற்றம்
கோவில் யானைகள் முதுமலைக்கு மலைப்பாதை வழியே கொண்டு செல்லப்படுவதால் யானைகள் உடல்நலம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து, 2012, 2013, 2014ம் ஆண்டுகளில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டிக்கு முகாம் மாற்றப்பட்டது.
சிறப்பு முகாமில் அமைச்சர்கள்
8வது முறையாக யானைகள் முகாம் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் இன்று காலை துவங்கியது.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் காமராஜ் முகாமினை துவக்கி வைக்க, அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
48 நாட்கள் புத்துணர்வு முகாம்
இந்த முகாமில் 30 யானைகள் பங்கேற்றுள்ளன. யானைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், யானைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உரிய சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இன்று தொடங்கி உள்ள இந்த முகாம், வருகின்ற பிப்ரவரி மாதம் 23-ம் தேதி வரை, 48 நாட்கள் நடைபெற உள்ளது. இதேபோல், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள 24 வளர்ப்பு யானைகளுக்கும் இன்று நல்வாழ்வு முகாம் துவங்கியது.
பவானி ஆற்றில் யானைகள்
முகாம் துவக்க விழாவையொட்டி, யானைகளை குளிப்பாட்ட, பவானி ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டிருந்த ஷவருக்கு, யானைகளை பாகன்கள் அழைத்து சென்றபோது, காட்டு யானை ஒன்று பவானி ஆற்றை கடந்து முகாமுக்குள் நுழைந்தது.
எட்டிப்பார்த்த காட்டுயானை
காட்டு யானையை கண்டு பாகன்கள் கூச்சலிட்டனர், கோவில் யானைகளோ அச்சத்தில் தெறித்து ஓடின இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சில மணிநேரங்களில் அங்கு கலவரமே ஏற்பட்டது போல மாறியது.
கொம்பனை விரட்டிய வனத்துறை
இதையடுத்து அங்கிருந்த வனத்துறையினர், பட்டாசு வெடித்து காட்டு யானையை வனத்துக்குள் விரட்டியடித்தனர். மேலும் வனத்தையொட்டிய பகுதியில், வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
முதல் நாளிலேயே சிறப்பு நலவாழ்வு முகாமுக்குள் காட்டு யானை நுழைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியால் கோவில்யானைகளை அழைத்து வந்துள்ள பாகன்கள் அச்சமடைந்துள்ளனர். இனிவரும் நாட்களில் இந்த முகாமுக்குள் காட்டு யானைகள் நுழைந்தால், கோவில் யானைகள் மிரண்டு பெரும் அசம்பாவிதம் நிகழவும் வாய்ப்பு உள்ளது என பாகன்கள் தெரிவித்துள்ளனர்.
கொம்பன் வராத வரைக்கும் 48 நாட்களும் இனி காட்டுக்குள் கோவில் யானைகளுக்குள் ஒரே உற்சாகம்தான்..