குடியால் சீரழிந்த பொறியாளர் - கழுத்தை அறுத்து கொன்ற தந்தை போலீசில் சரண்
திருச்சி: திருச்சியில் மனைவிகளுடன் வாழாமல் சுற்றித்திரிந்த பொறியாளர் ஒருவரைக் கொலை செய்த அவரது தந்தை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகிலுள்ள ஜெய்நகரைச் சேர்ந்தவர் நடேசன். ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளர். இவரது மூத்த மகன் சுரேஷ். மின்னணு பொறியியல் பயின்ற இவர் திருச்சி பெல் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றினார்.

இவர் கடந்த சில ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலே இருந்து வருகிறார். மேலும், சுரேஷ் தீவிர மதுப்பழக்கம் உள்ளவர். இவருக்கு இரு முறை திருமணம் செய்தும், இவரது மதுப் பழக்கத்தால் சுரேஷின் மனைவிகள் இருவருமே கணவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர்.
குடிப்பழக்கம் காரணமாக சுரேஷ் தவறான நண்பர்களுடன் சுற்றி திரிந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று வீட்டின் வரவேற்பறையில் சுரேஷ் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்தச் சம்பவம் குறித்து ஓமலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட சுரேஷின் தந்தை நடேசன் ஓமலூர் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை சரணடைந்தார். தனது மகன் சுரேஷ் தினமும் மது அருந்திவிட்டு வந்து தன்னையும், தனது மனைவியையும் துன்புறுத்தி வந்தார் என்றும், இதனால் கடந்த 7 ஆம் தேதி மதுப்போதையில் வீட்டுக்கு வந்த சுரேஷை கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாக நடேசன் போலீஸாரிடம் கூறினார்.
இதனையடுத்து, காவல் நிலைய ஆய்வாளர் பி.கே.செந்தில்குமார், நடேசனை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்ததுடன் அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.












Click it and Unblock the Notifications