பொறியியல் கலந்தாய்வு: நாளை முதல் பொது பிரிவு மாணவர்கள் பங்கேற்பு– 3,000 பேருக்கு அழைப்பு
சென்னை: பி.இ. பொறியியல் படிப்பிற்கான பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை தொடங்கி ஜூலை 28ம் தேதிவரை நடைபெற உள்ளது. முதல் நாளன்று நடைபெற உள்ள கலந்தாய்விற்கு 3,000 மாணவ- மாணவிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு கடந்த 23-ந் தேதி தொடங்கியது. விளையாட்டுப்பிரிவு மாணவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது.

1,76,000 இடங்களுக்கு
பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நாளை (27-ந் தேதி) தொடங்கி ஜூலை மாதம் 28-ந் தேதி வரை நடைபெறுகிறது. பொது கலந்தாய்வு மூலம் ஒரு லட்சத்து 76 ஆயிரம் பி.இ, பி.டெக் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு தேதி, நேரம் ஆகிய விவரங்கள் அண்ணா பல்கலைக்கழக இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
மாணவர்களுக்குத் தகவல்
சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு அழைப்பு கடிதமும், குறுந்தகவலும் அனுப்பப்பட்டுள்ளன. முதல் நாளான நாளை நடக்கும் கலந்தாய்விற்கு 3 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஒவ்வொரு நாளும் சராசரியாக 5 ஆயிரம் பேர் அழைக்கப்படுகிறார்கள்.
ஆணை வழங்கும் அமைச்சர்
பொது கலந்தாய்வு நாளை காலை 9 மணிக்கு தொடங்குகிறது. முதல் 10 இடங்கள் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் பழனியப்பன் கல்லூரியில் சேருவதற்கான ஒதுக்கீட்டு ஆணையை வழங்குகிறார்.
சிறப்பு ஏற்பாடுகள்
கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவ-மாணவிகள், அவர்களின் பெற்றோர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் செய்யப்பட்டுள்ளன.
போக்குவரத்து வசதி
வெளி மாவட்டங்களில் இருந்து வரும் மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் வந்து சேர மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு, பெருங்களத்தூரில் இருந்து சிறப்பு பேருந்துகள் மூலம் பயணம் செய்யலாம்.
வெளியூர் மாணவர்களுக்கு
கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாக மையத்துக்கு வர வேண்டும். அவர்கள் கட்-ஆஃப் மார்க் மற்றும் தரவரிசை எண் அடிப்படையில் வரிசையாக உட்கார வைக்கப்படுவார்கள். வெளியூர் மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்தில் கழிவறை, குளியல் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதை பெற்றோர்களும் பயன்படுத்தி கொள்ளலாம்.
ஏற்பாடுகள் தயார்
மேலும் குடிநீர் வசதி, பெற்றோர்களுக்கு உதவும் வகையில் அறிவிப்பு பலகைகள் அவ்வப்போது ஒலி பெருக்கி மூலம் தகவல்களும் வழங்கப்பட உள்ளன. இருக்கைகள், பிரமாண்ட பந்தல், ஒளித்திரைகள், கூடாரங்கள் அமைக்கப்பட்டு காலி இடங்கள் பற்றிய விவரங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
புரோக்கர்களுக்கு தடை
மாணவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்ய கூடமும், தகுதிச் சான்றிதழ் பெறுவதற்கான இடமும், டெபாசிட் தொகை செலுத்த வங்கி கவுண்டர்களும் செயல்படுகின்றன. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புரோக்கர்கள் நடமாட்டத்தை கண்காணிக்க போலீசாரும் குவிக்கப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications