ஆரம்பத்தில் ஜெ.வைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டு தீர்ப்பின்போது கூப்பாடு போட்ட இங்கிலீஷ் சானல்கள்!
சென்னை: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக ஆரம்பத்திலிருந்தே கண்டு கொள்ளாமல் இருட்டடிப்பு செய்த ஆங்கில செய்தி சானல்கள் இன்று தீர்ப்பின்போது மட்டும் படு முக்கியமாக விழுந்து விழுந்து ஒளிபரப்பு செய்த கூத்தை மக்கள் கண்டனர்.
ஆங்கிலச் சானல்களுக்கு டெல்லி, வட இந்திய மாநிலங்கள்தான் முக்கியமானவை. அதிலும் இந்தி பேசும் மாநிலங்கள் என்றால், யாராவது ஒருவர் கேஸ் விட்டால் கூட விழுந்து விழுந்து அதை லைவ் செய்து பரம மகிழ்ச்சி அடைவார்கள்.
அதைத் தாண்டி வேறு எந்த மாநிலத்தில் எது நடந்தாலும் கண்டு கொள்ள மாட்டார்கள். அப்படியே கண்டு கொண்டாலும் கூட தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் என்றால் மூச்சே காட்ட மாட்டார்கள். கடைசிக் கட்டமாகத்தான் அதைக் காட்டி வி்ட்டுப் போவார்கள்.
முன்பு லாலு பிரசாத் யாதவ் மீதான மாட்டுத் தீவண வழக்கின்போது ஒவ்வொரு நிகழ்வையும் லைவ் செய்து கொண்டாடினர். ஆனால் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் ஒவ்வொரு முறையும் வாய்தா வாங்கியபோதெல்லாம் அதைக் கண்டு கொண்டதே கிடையாது. செய்தி கூட போட்டது கிடையாது.
ஆனால் இன்று தீர்ப்பையொட்டி காலையிலிருந்தே மாய்ந்து மாய்ந்து செய்தி கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.