ஜெ.வுக்காக திரையுலகம் உண்ணாவிரதம்.. குண்டுகல்யாணம், ராமராஜன் பங்கேற்பு- படப்பிடிப்புகள் ரத்து!
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் உள்ள ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும், தீர்ப்பு குறித்த வருத்தத்தையும் உணர்வுகளையும் தெரிவிக்கும் நாளை ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் சென்னையில் உண்ணாவிரதத்தில் குதித்துள்ளது.
தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என சகல தரப்பினரும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழ் திரையுலக கூட்டமைப்பு இதற்கான ஏற்பாட்டைச் செய்துள்ளது.
சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம்
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தமிழ் திரைத்துறையினர் கலந்து கொள்ளும் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளது.
ராமராஜன்- குண்டு கல்யாணம்
அதிமுகவைச் சேர்ந்த நடிகர்கள் ராமராஜன், குண்டு கல்யாணம் உள்ளிட்டோர் உண்ணாவிரதத்தில் உட்கார்ந்துள்ளனர்.
சினிமா காட்சிகள் ரத்து
மேலும், தமிழகம் முழுவதும் நாளை திரையரங்குகளில் சினிமா படக்காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எங்குமே படம் ஓடவில்லை.
அனைத்து அமைப்புகளும்
இந்த உண்ணாவிரதத்தில் தமிழ் சினிமாவின் அனைத்து அமைப்புகளும் பங்கேற்கின்றன.
படப்பிடிப்புகளும் ரத்து
சினிமா மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திரையரங்கு உரிமையாளர்கள்
தியேட்டர் அதிபர்களும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். சென்னையில் நேற்று நடந்த தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தேனாம்பேட்டையில்
இக்கூட்டத்தில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் நான்கு காட்சிகளை ரத்து செய்வது என்றும், தேனாம்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாலை 5 மணி வரை உண்ணாவிரதம்
சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று மாலை 5 மணி வரை நடைபெறும்.
யார் யார்?
இந்தப் போராட்டத்தில் தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய நடிகர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, சென்னை சிட்டி திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு, சினிமா பி.ஆர்.ஒ. யூனியன் உள்ளிட்ட ஒட்டுமொத்த திரையுலகினரும் கலந்து கொண்டுள்ளனர்.
புதுச்சேரியிலும் படம் ஓடலை
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் இன்று தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. படங்கள் எதுவும் ஓடவில்லை. புதுச்சேரியிலும் இன்று அனைத்துக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. முன்னதாக இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி சினிமா தியேட்டர் அதிபர்கள் சங்க தலைவர் லக்கி பெருமாள், சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கண்டித்து தமிழ்நாட்டில் இன்று சினிமா நடிகர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளப்போவதாக அறிவித்து உள்ளனர். அவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புதுச்சேரியிலும் இன்று அனைத்து சினிமா தியேட்டர்களும் மூடப்படும் என்று கூறியிருந்தார்.