பகல்கனவு காணாம பேச்சுவார்த்தைக்கு வாங்க ஓ.பிஎஸ் !... திருப்பூர் எம்எல்ஏ குணசேகரன் தடாலடி
ஓ.பன்னீர்செல்வம்அணியினர் பகல்கனவு காணாமல் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று திருப்பூர்தெற்கு தொகுதி எம்எல்ஏ குணசேகரன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் : அதிமுகவின் இரு அணிகள் இணைந்து பொதுக்குழுவை கூட்டினால் மட்டுமே சசிகலா பதவிநீக்கம் குறித்து முடிவு செய்ய முடியும் என்று எம்எல்ஏ குணசேகரன் கூறியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து அதிமுக இரண்டு அணிகளாக பிளவுபட்டு கிடக்கிறது. கட்சியின் சின்னமும் பெயரும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முடக்கப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிச்சாமி அணி இரண்டில் எந்த அணிக்கு சின்னமும் கட்சியின் பெயரும் கிடைக்கும் என்பது ஜுன் மாதம் தேர்தல் ஆணையம் நடத்த உள்ள விசாரணையில் தெரிய வரும்.
ஓ.பன்னீர்செல்வம் அணி தங்கள் தரப்புக்குத் தான் கட்சியினர்மத்தியில் ஆதரவு இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில், 6 ஆயிரத்து 500 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் கடந்த மாதம் தாக்கல் செய்துள்ளது. இணைப்பு பேச்சுவார்த்தை நடக்கும் என்று தமிழகத்தில் புகைந்து கொண்டிருக்கும் போதே, சைலன்ட்டாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த அறிக்கையால் ஷாக்கான ஈபிஎஸ் அணியும் கட்சி நிர்வாகிகளிடம் இருந்து சசிகலா, தினகரனுக்கும் ஆதரவாகவும், முதல்வர் பழனிச்சாமி அரசு நீடிக்கவும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு ஜரராக நடந்து வருகிறது.
இரு அணியின் பேச்சுவார்த்தையும் இல்லை இணைப்பும்இல்லை என்ற நிலை தற்போது அதிமுகவில் நீடிக்கும் சூழலில் ஈபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்கள் பேச்சுவார்த்தைக்கு தாங்கள் தயாராக இருப்பதாக தெரிவித்து வருகின்றனர். மதுரை நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணியும் இரு அணிகள் இணைந்து பேசினால் பிரச்னை தீர்ந்தவிடும் என்றார்.
இந்நிலையில் திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஈபிஎஸ் அணியை சேர்ந்த திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ குணசேகரன், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் பகல் கனவு காணாமல் இரவில் தூங்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஓ.பிஎஸ் உடன் இருப்பவர்களின் ஆலோசனைகளை கேட்காமல் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று சொன்னதை நிறைவேற்றும் விதமான ஈபிஎஸ் அணியுடன் கட்சி ஒருங்கிணைப்பு குறித்த பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும் என்றார்.
சசிகலா குடும்பத்தை கட்சியை விட்டு நீக்க வேண்டுமெனில் அதற்கு அதிமுக பொதுக்குழு கூட வேண்டும் என்றும், பொதுக்குழுவை கூட்ட கட்சியில் பிளவு பட்டிருக்கும் இரண்டு அணிகளும் ஒன்றுபட வேண்டும் என்றும் குணசேகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.