ஓபிஎஸ் நிலை எனக்கு வந்திருந்தால் அரசியலை விட்டே போயிருப்பேன்.. ஜெயா டிவி நேர்காணலில் துரைமுருகன்!
பதவியில் இருக்கிறோம் என்ற ஆண்மை ஆட்சியாளர்களுக்கு இல்லை என்று திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் அதிமுக அரசை விமர்சித்துள்ளார்.
Recommended Video

சென்னை : முதல்வர் எடப்பாடி அரசுக்கு பதவியில் இருக்கிறோம் என்ற ஆண்மை இல்லை என்று திமுகவின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் சாடியுள்ளார்.
ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியின் விடைக்குள் வினா நேர்காணல் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று பேசியதாவது : ஜெயலலிதாவிற்கு எதையுமே சாதிக்க வேண்டும் என்ற தீர்க்கம் உண்டு. அவர் ஏன் அமைச்சர்களை பேசாமல் வைத்திருந்தார் என்று இப்போது தெரிகிறது. இவர்களின் திறமை தெரியும், எல்லோரும் உளறுவார்கள் என்று தெரிந்ததால் தான் எல்லாத்தையும் அவரே பேசினார்.
ஒரு அமைச்சர் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்று சொல்கிறார், ஒரு அமைச்சர் டெங்கு வராமல் இருக்க வாசலில் சாணம் தெளிக்கச் சொல்கிறார்,அதே மந்திரி வைகை அணை நீராகாமல் தடுக்க தெர்மகோல் போட்டு மூடுகிறார். இதையெல்லாம் கேட்பதற்கு ஆளில்லை.

ஆளுநருக்கு இருக்கும் அதிகாரம் என்ன?
ஆளுநர் தமிழகத்தில் ஆய்வு செய்கிறார், அவருக்கு சட்டப்படி பார்த்தால் 2 பணி தான் இருக்கிறது. மாநில அரசு அமைச்சரவையில் எடுத்த முடிவுகளை ஒப்புதல் தரவோ நிறுத்தவோ அதிகாரம் இருக்கிறது. மற்றொன்று மத்திய அரசுக்கு உளவு சொல்வது, ஆனால் எந்த காரணத்தைக் கொண்டும் இந்த கூட்டத்தை நடத்தக் கூடாது.

ஆளுநர் ஆய்வு நடத்துகிறார்
ஆளுநர் அமைச்சராக இருந்தவர், எதிர்க்கட்சியாக போராட்டம் நடத்தியவர், பத்திரிக்கையாளர் அவரால் சும்மா இருக்க முடியவில்லை. அமைச்சர்கள் எல்லாம் சும்மா இருப்பதால் இவர் ஆய்வு நடத்துகிறார். தமிழகத்தில் ஆளுநரின் ஆய்வை அமைச்சர்கள் சரி என்று சொன்னால் மற்ற மாநில அமைச்சர்கள் நம் மீது உமிழ்வார்கள்.

கண்ணியத்தை காக்க வேண்டாம்?
பதவியில் இருக்கிறோம் என்ற ஆண்மை இவர்களுக்கு இல்லை. தமிழகத்தை ஆள்கிறோம், அந்த பதவிற்கு இருக்கும் கண்ணியத்தை காக்க வேண்டாமா? இப்படி ஒரு மானங்கெட்டத் தனத்தை நான் உலகத்தில் பார்த்ததே இல்லை. மானம், ரோஷம் இருந்திருக்க வேண்டும். இவர்கள் அடிமையாக இருப்பதைப் பார்த்து மாற்ற மாநிலத்தவர் சிரிப்பார்கள். ஆந்திராவிலோ, மேற்குவங்கத்திலோ இது போன்று ஆளுநர் ஆய்வு செய்ய முடியுமா?

அரசு நடத்தவில்லை
ஆண்டிற்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியர்கள், காவல் அதிகாரிகளை அழைத்து அரசு ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும். ஆனால் அது மாதிரியான கூட்டம் நடக்கவே இல்லை. அதனால் தான் ஆளுநர் களத்தில் இறங்கி அப்படி ஒரு கூட்டத்தை நடத்துகிறார். அதையும் இந்த அமைச்சர்கள் சரிதான் என்கிறார்கள்.

நான் அரசியலில் இருக்க மாட்டேன்
இரு அணிகள் இணைப்பில் ஏமாந்தது ஓ.பன்னீர்செல்வம், ஏமாத்தியது எடப்பாடி பழனிசாமி. ஓ. பன்னீர்செல்வத்திற்கு கிரீடத்தை கொடுத்து எடப்பாடி பழனிசாமி தலையை வாங்கி விட்டார். ஓ.பன்னீர்செல்வம் மாதிரியான நிலைமை எனக்கு வந்தால் ஒரு நாளும் நான் அரசியலில் இருக்க மாட்டேன். மானம் தான் முக்கியம்.

மானம் வேண்டும்
அரசியலே வாழ்க்கை இல்லை, நமக்கென்று ஒரு மானம் இருக்க வேண்டும். ஒரு முறைக்கு 3 முறை ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்துவிட்டார் இதை விட வேறு என்ன வேண்டும். அரசியலில் இருக்கும் எல்லோருமா அமைச்சர்கள், முதல்வர்களாகிறார்கள். நாதஸ்வரத்திற்கு ஒத்து ஊதுவது போல ஏன் இப்படி ஒரு நிலைமை வேண்டும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு? அவர் அரசியல்வாதியல்ல ஒரு பிழைப்புவாதி.












Click it and Unblock the Notifications