அரசியல்வாதியாக இருந்து பேராசிரியராக மாறிய இரா. செழியன்
முதுபெரும் அரசியல்வாதியும், இரா. நெடுஞ்செழியன் சகோதரருமான இரா. செழியன் இன்று காலமானார் அவருக்கு வயது 95.
வேலூர்: அரசியல்வாதியாக இருந்து வேலூர் பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியராக பணியாற்றிய இரா. செழியன் இன்று காலமானார். அவருக்கு வயது 95.
மறைந்த முன்னாள் நிதியமைச்சர் இரா.நெடுஞ்செழியனின் சகோதரர்தான் இந்த இரா.செழியன். மாணவர் காலத்திலேயே திராவிட இயக்கத்தில் சேர்ந்த இரா.செழியன், பின்னர் தி.மு.க ஆரம்பிக்கப்பட்டபோது பேரறிஞர் அண்ணாவுடன் இணைந்து செயலாற்றினார். அவருடைய நம்பிக்கைக்கு முழு பாத்திரமாக விளங்கினார்.

அதன்பிறகு அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி, ஜனதாக் கட்சியில் சேர்ந்தார். அந்தக் கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் இணைந்து செயல்பட்டார். அந்தக் கட்சி பின்னர், ஜனதா தளமாக மாறியபோதும் முக்கியப் பொறுப்புகளில் பதவி வகித்துவந்தார்.
எந்த அரசியல் கட்சிக்கும் நான் சொந்தக்காரன் அல்ல... பொது மனிதன். அரசியலில் இல்லை என்றாலும்கூட, மக்கள் சம்பந்தமான பிரச்னைகளில்தொடர்ந்து போராடுவேன், அவர்களுக்காக நடத்தப்படும் எந்தப் போராட்டத்திலும் முன்வந்து செயல்படுவேன் என்று சொன்னவர் இரா. செழியன்.
மனிதனை, 'ஓர் அரசியல் விலங்கு' என்று கிரேக்க ஞானி அரிஸ்டாட்டில் வர்ணித்தார். எனவே, நானும் அத்தகைய மனிதனாவும் மனிதநேயம் கொண்ட அரசியல்வாதியாகவும் தொடர்ந்து பாடுபடுவேன்.
நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று தீவிர அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாகச் சொன்னபோது இரா. செழியன் கூறிய வார்த்தைகள் இவை.
அரசியலில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் சேவையாற்றிய இரா.செழியன், அதிலிருந்து ஓய்வுபெற்று வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் கெளரவப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
ஊழலுக்கு எதிரான முயற்சிகளிலும் இரா.செழியன் ஈடுபட்டார். சமூக சேவகர் அண்ணா ஹசாரே, 2011-ம் ஆண்டு ஊழலுக்கு எதிராகக் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கியபோது அதற்கு ஆதரவு தெரிவித்தார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இரா.செழியன், பல்வேறு பிரச்னைகளுக்காகக் குரல்கொடுத்துள்ளார். அப்படி நாடாளுமன்றத்தில் பேசிய அவருடைய உரைகள் தொகுக்கப்பட்டு, 'பார்லிமெண்ட் பார் தி பீப்பிள்' என்ற நூலாக வெளிவந்துள்ளது.
தமிழர்களைக் காப்பாற்ற தமிழர்களால் மட்டுமே முடியும். மற்றவர்கள் யாரும் அதற்காக முன்வர மாட்டார்கள். டெல்லியில் இருப்பவர்கள்தான் தமிழர்களின் முதல் எதிரிகள்.
மிகச் சிறந்த அரசியல்வாதியாகவும், எழுத்தாளராகவும், பேராசிரியராகவும் பணியாற்றிய இரா.செழியன் இன்று காலமானார். அவரது உடல் விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications