கோபி அருகே கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி தந்தை, மகன் உட்பட மூன்று பேர் பலி
வாய்க்காலில் குளிக்க சென்றபோது நீரின் வெள்ளத்தில் 3 பேர் அடித்து செல்லப்பட்டனர்.
கோபி: கோபி அருகே கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி தந்தை மகன் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள சேவூர் முரியாண்டம் பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். எலெக்ட்ரிக் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மேனகா. இவர்களுக்கு அருண்குமார் என்ற மகனும், திவ்யதர்ஷினி என்ற மகளும் உள்ளனர்.

அருண்குமார் நம்பியூரில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பும், திவ்யதர்ஷினி சேவூரில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பும் படித்து வருகின்றனர். மேனகாவின் தங்கை மகேஷ்வரி, இவர் திருப்பூரில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மகேஷ்வரி, மற்றும் அவரது உறவினர் மகள்கள் பவித்ரா, சவுமியா ஆகியோர் பள்ளி கோடை விடுமுறைக்காக செந்தில்குமார் வீட்டிற்கு வந்துள்ளனர். சவுமியா 10ம் வகுப்பும், பவித்ரா 9ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்நிலையில், செந்தில்குமார் தனது மனைவி, மகன், மகள் மற்றும் மகேஷ்வரி, சவுமியா, பவித்ரா ஆகியோருடன் கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு நேற்று அழைத்து சென்றுள்ளார். அங்கு கூட்டம் அதிகமாக இருக்கவே அனைவரும் நம்பியூர் மூனாம்பள்ளி அருகே உள்ளகீழ்பவானி வாய்க்காலுக்கு சென்றுள்ளனர்.
அங்கு குளித்துக்கொண்டு இருந்தபோது அருண்குமார் மற்றும் மகேஷ்வரி ஆகியோர் தண்ணீரின் வேகம் அதிகமாக இருக்கவே நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு செந்தில்குமார் இருவரையும் காப்பாற்ற முயற்சித்துள்ளார். ஆனால் அவரும் நீரில் அடித்து செல்லப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த கோபி தீயணைப்புத்துறையினர் வாய்க்காலில் அடித்துச்செல்லப்பட்ட மூன்று பேரின் சடலங்களையும் மீட்டனர். இதுகுறித்து நம்பியூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாய்க்காலில் மூழ்கி தந்தை மகன் உட்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications