கருகிய மஞ்சள் பயிர்... ஈரோடு விவசாயி விஷம் குடித்து தற்கொலை
ஈரோடு: ஈரோடு மாவட்டம் தாமரைக்குளத்தில் விவசாயி முத்துசாமி தற்கொலை செய்துகொண்டுள்ளார். நிலத்தில் பயிரிட்டிருந்த மஞ்சள் பயிர் கருகியதால் மனமுடைந்து விவசாயி முத்துசாமி தனது நிலத்திலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
காலிங்கராயன் கால்வாயில் பாசனத்துக்காக ஆகஸ்ட் 12ம் தேதி நீர் திறக்கப்பட்ட நிலையில், பருவமழை பொய்த்துப் போனதாலும், பவானிசாகர் அணையின் நீர் இருப்பு வெகுவாக குறைந்ததாலும் செப்டம்பர் 9ம் தேதியே நீர் நிறுத்தப்பட்டது.
இதனால், முத்துசாமி உள்ளிட்ட காலிங்கராயன் பாசன பகுதிக்குட்பட்ட விவசாயிகள் பயிரிட்டு இருந்த மஞ்சள், நெல் போன்ற பயிர்கள் நீரின்றி வாடின. தனது நிலத்தில் பயிரிடப்பட்ட மஞ்சள் பயிர் கருகியதைக் கண்டு மனமுடைந்த விவசாயி முத்துச்சாமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அடுத்த கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் கே.பி.ராமலிங்கம் என்பவர் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் இன்று தாமரைக்குளத்தில் விவசாயி முத்துச்சாமி தற்கொலை செய்து கொண்டார்.
பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்திற்குட்பட்ட 24,500 ஏக்கருக்கும், காலிங்கராயன் கால்வாய் பாசனத்திற்குட்பட்ட 15, 400 ஏக்கருக்கும், கீழ்பவானி பாசனத்திற்குட்பட்ட இரண்டு லட்சத்து 7000 ஏக்கருக்கும் நீர் வழங்கப்படுகிறது. பருவமழைப்பொழிவு, நீர் வரத்து குறையும்போது, அதற்கேற்ப சதவீத அடிப்படையில் விநியோகிக்கும் நீரின் அளவு அளவிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது
விவசாயிகள் தற்கொலைகள் தொடர்வது ஈரோடு மஞ்சள் விவசாயிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்து போன விவசாயி முத்துச்சாமி குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், பாசனத்திற்கு 15 நாட்களுக்கு உடனடியாக உயிர் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
காவிரி தண்ணீர் கிடைக்காததது, பொய்த்துப் போன பருவமழை காரணமாக பயிர்கள் கருகி வருவதால் டெல்டா மாவட்டங்களில் 8 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 2 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.