என்னது திமுகவில் சேரப் போகிறேனா? நான் விற்பனைக்குரிய பொருள் அல்ல... ஈரோடு கணேசமூர்த்தி காட்டம்
சென்னை: திமுகவில் தாம் சேரப் போவதாக வெளியான செய்திகளை முன்னாள் எம்.பி.யும் ஈரோடு மாவட்ட மதிமுக செயலருமான கணேசமூர்த்தி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே ஈரோடு கணேசமூர்த்தி திமுகவில் சேரப் போவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் இதனை கணேசமூர்த்தி தற்போது மறுத்துள்ளார்.

இது குறித்து கணேசமூர்த்தி கூறியுள்ளதாவது:
எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தி.மு.க.வினர் திட்டமிட்டு வதந்திகளை பரப்பி வருகின்றனர். தி.மு.கவில் நான் சேர போவதாகவும், இது தொடர்பாக ரகசிய பேரம் நடந்து வருவதாகவும் அந்த வதந்தியில் கூறப்பட்டு உள்ளது. இது முற்றிலும் தவறானது. பேரம் எதுவும் நடக்க வில்லை.
யாரும் என்னுடன் பேச்சு நடத்தவும் இல்லை. 1993-ம் ஆண்டு வரை ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளராக நான் இருந்து உள்ளேன். அப்போது நானாக தி.மு.கவை விட்டு செல்லவில்லை. தி.மு.க. வில் இருந்து என்னை வெளியேற்றியதால் தான் ம.தி.மு.க.வில் சேர்ந்தேன்.
ம.தி.மு.க.வை உருவாக்கிய முக்கிய நிர்வாகிகளில் நானும் ஒருவன். ம.தி.மு.கவில் இருந்து நான் வெளியேற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
நான் அரசியலை வியாபாரமாக கருதக் கூடியவன் அல்ல. நான் விற்பனைக்குரிய பொருளும் அல்ல. எனவே என்னை யாரும் விலை கொடுத்து வாங்கவோ விற்கவோ முடியாது.
இவ்வாறு கணேசமூர்த்தி கூறினார்.












Click it and Unblock the Notifications