குடிகார கணவர்... வறுமை காரணமாக குழந்தையை அடித்துக் கொன்று எரித்த தாய் கைது
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் வறுமையின் கொடுமையால் குழந்தையைக் கொலை செய்து எரித்த தாயைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பவானி நெரிஞ்சிப்பேட்டை கோவில்கரடு பகுதியைச் சேர்ந்தவர் சத்தியராஜ் (28). இவரது மனைவி ஜோதிமணி (25). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாகிறது. இவர்களுக்கு 4-வயதில் ஸ்ரீதேவி, ஒன்றரை வயதில் திவ்யதர்ஷினி என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
கட்டுமானத் தொழிலாளியான சத்தியராஜ் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவராக இருந்துள்ளார். தனது வருமானம் முழுவதையும் குடிப்பதற்கே செலவு செய்ததால், அவரது குடும்பம் சாப்பாட்டிற்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளது.
ஒரு கட்டத்தில் வேலை எதற்கும் செல்லாத சத்தியராஜ், வீட்டில் உள்ள பொருட்களை விற்று குடித்து வந்துள்ளார். இதனால், சத்தியராஜூக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், மற்ற வீடுகளில் தீபாவளிக்கு துணிமணிகள் எடுப்பதைக் கண்டு வேதனையடைந்தார் ஜோதிமணி. ஊரே விழாக்கோலம் பூணும் காலத்தில், தன் குழந்தைகளுக்கு தன்னால் சாப்பாடு கூட போட இயலவில்லையே என அவர் விரக்தி அடைந்துள்ளார்.
இதனால், நேற்று அதிகாலை அரிவாளின் பின்புறத்தைக் கொண்டு தனது குழந்தை திவ்யதர்ஷினியின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில், தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்த திவ்யதர்ஷியின் மீது வீட்டில் இருந்த பழைய துணிகளைப் போட்டு மண்ணெண்ணெய் ஊற்றி அவர் தீ வைத்துள்ளார்.
பின்னர் கூச்சல் போட்டு தன் கணவர் மகளைக் கொலை செய்து விட்டு எரித்து விட்டதாக ஜோதிமணி நாடகமாடியதாகத் தெரிகிறது. அதற்குள் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஜோதிமணியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது, முதலில் முன்னுப்பின் முரணாக பேசிய ஜோதிமணி இறுதியில் கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கருகிய நிலையில் மீட்கப்பட்ட குழந்தையின் உடலை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், ஜோதிமணியை கைது செய்தனர்.