ஐரோப்பிய யூனியன் போல இந்தியாவும் புலிகள் மீதான தடை நீக்க பழ. நெடுமாறன் கோரிக்கை
விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் நீக்கியுள்ளது. இதே போன்று இந்தியாவும் செய்ய வேண்டும் என்று பழ.நெடுமாறன் கோரியுள்ளார்.
சென்னை: விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் நீக்கியதை தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வரவேற்றுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாத இயக்கம் என்று கூறி கடந்த 2006ம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் தடை விதித்தது. இன்று பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய யூனியன் நீக்கியுள்ளது.
இது தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் பலரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இதுகுறித்து தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் கூறியதாவது:

வரவேற்பு
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கியது வரவேற்கத்தக்கது. இதனை நான் பாராட்டுகிறேன். இலங்கை அரசின் வற்புறுத்தலின் பேரில்தான் ஐரோப்பிய யூனியன், விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்தது.

புலிகள் அமைப்பு போராட்ட இயக்கம்
இப்போது, ஐரோப்பிய யூனியனே அந்தத் தடையை நீக்கி இருப்பதினால், விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம் அல்ல; அது ஒரு விடுதலைப் போராட்ட இயக்கம் என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறது.

தடையை இந்தியா நீக்க வேண்டும்
இதனைப் பின்பற்றி, விடுதலைப் புலிகள் மீதானத் தடையை இந்தியா நீக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்க வேண்டும்.

ஈழத் தமிழர்களுக்க விடிவு
இதன் மூலம் இலங்கையில் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையும், அவர்களின் வாழ்வில் விடிவும் பிறக்கும். வாழ்வு செழிக்கும் என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications