ஜல்லிக்கட்டு தெரியும்.... எருதுக்கட்டு தெரியுமா?
-எஸ் ஷங்கர்
ஜல்லிக்கட்டு நடத்தியே தீர வேண்டும் என்று உணர்ச்சிப்பூர்வமான போராட்டம் தமிழ்நாட்டிலும், தமிழகத்துக்கு வெளியில் வசிக்கும் தமிழர்களாலும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உண்மையில் தமிழ் நாட்டின் அனைத்து மாவட்ட மக்களும் ஜல்லிக்கட்டு நடத்துகிறார்களா என்றால்... இல்லை. சில மாவட்டங்களில் மட்டும்தான் இந்த ஜல்லிக்கட்டு. குறிப்பாக மதுரை, தேனி, திண்டுக்கல் பகுதிகளில் மட்டுமே ஜல்லிக்கட்டு தீவிரமாக நடத்தப்படுகிறது. கரூர், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை போன்ற மாவட்டங்களின் சில கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதுண்டு.

மற்ற மாவட்டங்களில்... ? கொங்கு மண்டலப் பகுதிகளான கோவை, ஈரோடு, நாமக்கல் போன்ற பகுதிகளில் ஜல்லிக்கட்டு கிடையாது.
சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரத்திலும் கூட ஜல்லிக்கட்டோ, மாடு சம்பந்தமான வேறு விளையாட்டுகளோ இல்லை.
ஆனால் வட மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியில் மட்டும் காளை தொடர்பான ஒரு விளையாட்டு மிகப் பிரபலம். அதுதான் எருதுக்கட்டு அல்லது எருதுவிடும் திருவிழா. சிலர் மஞ்சுவிரட்டு என்றும் இதனைக் குறிப்பிடுவார்கள்.

பொங்கலுக்கு அடுத்த நாளான காணும் பொங்கலன்று ஆரம்பிக்கும் இந்த எருதுக்கட்டு, தை மாதம் முழுக்க நடைபெறும். ஜல்லிக்கட்டை விட எக்கச்சக்க பரிசுத் தொகை எருதுக்கட்டுக்கு உண்டு.
எந்த அனுமதியும் தேவைப்படாத, காலகாலமாக நடத்தப்பட்டு வந்த இந்த எருதுவிடும் திருவிழாவுக்கும் சேர்த்துதான் தடை விதித்திருக்கிறார்கள் கடந்த இரு ஆண்டுகளாக.
இது எருதுகளுக்கான ஒரு ரேஸ். இந்த எருதுக்கட்டில் காளைகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை, மனிதர்களுக்குத்தான் ஆபத்து. எருதுக்கட்டுக்காக மிக நன்றாக வளர்க்கப்படும் எருதுகளை 'மந்தை எருதுகள்' என்பார்கள். சொன்னால் சொன்னபடி கேட்கும் காளைகள் இவை. 'டேய் கண்ணா... நல்லா வேகமா ஓடணும்... மின்னல் மாதிரி போ.. யார் கையும் உன்மேல படக்கூடாது' என்பார் எருதின் உரிமையாளர். எருதுகள் தலையாட்டி அதைக் கேட்டு, அதே மாதிரி மின்னல் வேகத்தில் ஓடுவதைப் பார்த்திருக்கிறோம்.

ஊரின் மையப்பகுதி அல்லது பெரிய சாலையில் கிட்டத்தட்ட 250 முதல் 400 மீட்டர்களுக்கு ஒரு மந்தை அமைப்பார்கள். அதாவது எருதுகளுக்கான ஓடு பாதை அது. அந்தத் தெரு அல்லது சாலை மிக நேராக இருக்க வேண்டும். வளைவான பாதையில் மந்தை அமைக்கமாட்டார்கள். இருபுறமும் மூங்கில் அல்லது சவுக்கு மரத் தடுப்புகள் அமைப்பார்கள். இருமருங்கிலும் மக்கள் பாதுகாப்பாக நின்று பார்ப்பதற்காக அந்த தடுப்புகள். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக கட்டடங்களின் மொட்டை மாடிகளில் நின்று பார்ப்பார்கள்.
பெரும்பாலும் பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கும் எருதுக்கட்டு 5 அல்லது 6 மணிக்குள் முடிந்துவிடும். இந்த எருதுக்கட்டுகளில் பங்கேற்று வென்ற பரிசுகளின் அடிப்படையில் காளைகளுக்குள் சூப்பர் ஸ்டார், அதற்கு அடுத்த ஸ்டார் ரேஞ்சுக்கு ரேங்கிங்கெல்லாம் உண்டு. எருதுகளின் ஊர்களைக் குறிப்பிட்டு, 'இது நாட்றம்பள்ளி எருதுடா... விண்ணமங்கலம் எருதுடா.. கலக்கும் பார்றா' என்றெல்லாம் போட்டி தொடங்கும் முன்பே சிலாகிப்பார்கள்.
தைரியமுள்ள இளைஞர்கள் மட்டும் மந்தைக்கு உள்ளே நின்று, ஓடும் காளைகளின் முதுகில் தட்டுவார்கள். அப்படி தட்ட முற்படும்போது எருது முட்டும் அல்லது எருதுகளுக்கு கட்டப்பட்டுள்ள வடக் கயிறுகளில் மாட்டி விழுந்து அடிபடுவதும் உண்டு. மந்தையின் ஆரம்பத்தில் நின்று பார்ப்பதுதான் ஓரளவு பாதுகாப்பு. மந்தை முடிவில் நின்றால் ஆக்ரோஷமாக ஓடி வரும் காளையின் பார்வையில் பட்டு மோதலுக்கு உள்ளாகும் ஆபத்து உண்டு.

ஒவ்வொரு எருதையும் நான்கு முறை மந்தையில் ஓட விட வேண்டும். இப்படி ஓடி முடித்த பிறகு, நான்கு ஓட்டங்களின் சராசரியைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில் பரிசுத் தொகை வழங்கப்படும். இந்த எருதுக்கட்டின் ஸ்பெஷல் அதற்காக நியமிக்கப்படும் வர்ணனையாளர்கள்.. அவர்கள் பிரயோகிக்கும் தனித்ததான ஒரு பேச்சு முறை.
முதல் பரிசு தொடங்கி, ஆறுதல் பரிசுகள் வரை 20 பரிசுகளுக்கு மேல் வழங்குவார்கள். பரிசுத் தொகை கிராமத்துக்கு கிராமம் வேறுபடும். சில எருதுக்கட்டுகளில் லட்ச ரூபாய்க்கு மேல் பரிசுத் தொகை உண்டு. சில கிராமங்களில் ரொக்கத்துக்கு பதில் கார், பைக் என வாகனங்களையே பரிசாக வழங்குவார்கள். பர்கூரில் நடந்த ஒரு எருதுக்கட்டில் முதல் பரிசாக ஒரு லாரியை வழங்கினார்கள் தொன்னூறுகளிலேயே.
எருதுக்கட்டுக்கு புகழ்பெற்ற வட மாவட்ட ஊர்கள்....
கல்நார்சாம்பட்டி, விண்ணமங்கலம், பர்கூர், கந்திலி, தோக்கியம், சந்திரபுரம், ஜெயபுரம், நாட்ரம்பள்ளி, பச்சூர், கிழக்கு பதனவாடி, ஜிஞ்சம்பட்டி, கசிநாயக்கன்பட்டி, கிருஷ்ணகிரி, பாலக்கோடு, சிந்தகாம்பள்ளி, ஊத்தங்கரை, மத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், அரூர், வெள்ளக்குட்டை, வளையாம்பட்டி, ராணிப்பேட்டை.
எருதுகளை ஹீரோவாகக் கொண்டாடும் இந்த எருதுக்கட்டுக்கும் தடை விதித்திருப்பது என்ன நியாயம் எனக் குமுறும் வட மாவட்ட மக்கள், இப்போது ஜல்லிக்கட்டுக்கும் சேர்த்தே போராடி வருகிறார்கள்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications